தமிழீழ ஆதரவு மாநாட்டில் 12 விரிவுரையாளர்கள் பங்கேற்பு! உயர்கல்வி அமைச்சு செயலாளர் தகவல்!
குறித்த மாநாட்டில் நான்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்து கொண்டதாக ஏற்கனவே புலனாய்வுத் துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே இப்புதிய தகவல்களை உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம், ஊவா, கிழக்கு மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களே லண்டனில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ளனர். இது பாரிய குற்றச் செயலாகும்.
இவ்வாறு லண்டனில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவு மாநாட்டில் கலந்து கொண்ட 12 பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் 11 தமிழர்களும் ஒரு முஸ்லிமும் அடங்குவதாகத் தெரியவந்துள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாடு திரும்பியதும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முப்படைகளின் தளபதியான ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கூறியிருக்கும் புதிய தகவலையடுத்து புலனாய்வுத்துறையினர் அது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு லண்டன் சென்றுள்ள குறித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் நடத்தும் உலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்ளவே சென்றதாகவும் சில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதும் குறித்த விரிவுரையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
லண்டன் சென்றுள்ள குறித்த விரிவுரையாளர்கள் உண்மையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச்ஹ சென்றார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனவே அவர்கள் நாடு திரும்பியதும் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பின்னரே அது பற்றிய மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ ஆதரவு மாநாட்டில் 12 விரிவுரையாளர்கள் பங்கேற்பு! உயர்கல்வி அமைச்சு செயலாளர் தகவல்!
Reviewed by Admin
on
August 18, 2013
Rating:

No comments:
Post a Comment