கனடா மாநாட்டில் நாடு கடந்தோர் இருந்தார்களா அல்லது நாடு கடக்காதோர் இருந்தனரா என்பது தெரியாது: சம்பந்தன்
கனடாவில் நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை. கனடா டொரன்டோவில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் கிளை ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் நாம் பங்கேற்றிருந்தோம். அதில் 500 பேர் வரையில் கலந்துகொண்டிருந்தனர். நான் பேசி முடிந்ததும் அவர்கள் எழுந்துநின்ற எனது பேச்சுக்கு வரவேற்பளித்தனர். அந்தச் சந்திப்பில் நாடுகடந்தவர்கள் இருந்தார்களா அல்லது நாடு கடக்காதவர்கள் இருந்தார்களா என்பது குறித்து எமக்குத் தெரியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
கனடா சென்றுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகைய செயற்பாடு அரசியலமைப்பினை மீறும் விடயமாகும் என்று கூட்டுப்படைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்தும் கனடா மற்றும் பிரித்தானியாவுக்கான விஜயம் தொடர்பிலும் கருத்துக்கேட்டபோதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
கனடா மற்றும் பிரித்தானியாவுக்கான எமது விஜயங்கள் வெற்றியளித்துள்ளன. புலம்பெயர்ந்த மக்களை நாம் சந்தித்து வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடினோம். வடமாகாணத்திலுள்ள மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வெளிமாவட்டங்களில் வாழும் வடமாகாணத்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் நாம் கலந்துரையாடினோம்.
இதன்போது இலாங்கையில் வாழும் தமது உறவுகளை வாக்களிக்கச் செய்வதற்கு தமமால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக புலம்பெயர்ந்த மக்கள் எமக்கு உறுதிவழங்கினர். இதேபோல் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நாம் விளக்கமளித்தபோது பொதுவாகவே புலம்பெயர்ந்த மக்கள் மிக ஆர்வமாக செயற்பட்டனர். இலங்கைவாழ் தமது உறவுகளை ஊக்குவித்து வாக்களிக்க செய்வதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
வடமாகாண சபை தேர்தலில் நாம் சாதாரண வெற்றியினை எதிர்பார்க்கவில்லை. திடமான வெற்றி எமக்கு அவசியமாகும். இதற்காக பூரண ஒத்துழைப்பு வழங்க புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் 3 இடங்களில் நான் கூட்டங்களை நடத்தியிருந்தேன். இந்தக் கூட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையே எற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டங்களிலும் நான் வடமாகாண தேர்தல் தொடர்பில் விளக்கிக் கூறினேன். கனடாவிலோ அல்லது பிரித்தானியாவிலோ நாட்டை பிரிப்பது குறித்து நாம் பேசவில்லை. வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்து மிகப்பெரிய வெற்றியை அடைவது குறித்தே பேசினோம்.

அரசாங்கமானது கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனையும் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனையும் இரு மடிகளில் வைத்து தாலாட்டிக்கொண்டு எம்மைப்பற்றி இவ்வாறு கூறுவது வேடிக்கையாக உள்ளது
கனடா மாநாட்டில் நாடு கடந்தோர் இருந்தார்களா அல்லது நாடு கடக்காதோர் இருந்தனரா என்பது தெரியாது: சம்பந்தன்
Reviewed by NEWMANNAR
on
August 21, 2013
Rating:

No comments:
Post a Comment