முதலமைச்சராக விக்கினேஸ்வரனை நியமிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம்
வடமாகாணசபை முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனை நியமிப்பதற்கு ஏகமனதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளமை தொடர்பான கடிதம் மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களது கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை அடுத்தே ஆளுநருக்கான கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் இந்தக் கடிதத்திற்கு ஆளுநர் சில தினங்களுக்குள் பதில் கடிதம் அனுப்பவேண்டும். இந்தக் கடிதம் கிடைத்ததும் முதலமைச்சராக சி.வி. விக்கினேஸ்வரன் பதவியேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்தே மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களது கூட்டத்தில் போனஸ் ஆசனத்திற்கு யாரை நியமிப்பது என்றும் அமைச்சரவையில் இடம்பெறும் உறுப்பினர்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
ஆனாலும் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
போனஸ் ஆசனங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் கடிதத்தினை எதிர்பார்த்துள்ளோம். இந்தக் கடிதம் கிடைத்ததும் இரண்டு போனஸ் ஆசனங்களுக்கான பெயர்களை நாம் ஆணையாளருக்கு அனுப்பிவைப்போம். இதன் பின்னரே இந்த இரண்டு உறுப்பினர்களும் பதவியேற்க முடியும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
முதலமைச்சராக விக்கினேஸ்வரனை நியமிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம்
Reviewed by Admin
on
September 25, 2013
Rating:

No comments:
Post a Comment