அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது.

அத்தகைய சிறப்பு மிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கொண்டாடும் நாள் இன்னாள்.

எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும்.

இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.

மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ‘ஆசிரியரை’ கௌரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு சமய கலாசார மற்றும் நிறுவன நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன. இவை மனித நாகரிகத்தின் வளர்ச்சிப்படிகள் எனின் மிகையல்ல.

ஒக்டோபர் 05 ‘உலக ஆசிரியர் தினம் உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் ஆசிரியரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக, ‘ஆசிரியரின் தன்மையினைக் கருத்திற்கொண்டு அங்கீகாரமளித்தல்’என்ற கூற்றுடன், பொதுக் கல்விக்காக அல்லது சிறப்புத் துறையொன்றுக்காக அவர்களினால் ஆற்றப்பட்டு வரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் முகமாக, இவ் உலக ஆசிரியர் தினத்தை அறிவித்து, வருடாந்தம் கொண்டாடப்பட்டும் வருகின்றது.

பொதுவாக ஆசிரியரை தெய்வீகத்தன்மையுடன் மதித்து மரியாதை செய்யும் வழக்காற்றினை ஆசிய நாடுகள் கொண்டுள்ளன. அவரவர் சமய கலாசார பின்னணிகளுக்கு ஏற்ப இதனை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் உள்ளன.

இலங்கை சிங்களவர் மற்றும் தமிழர் ஆசிரியர்களுக்கு வெற்றிலையைக் கொடுத்து காலில் விழுந்து வணக்கம் செலுத்துவர். சீனர்கள் ஆசிரியரின் வினாவுக்கு விடையளிப்பதாயினும் ஏதாவதொரு விடயத்தைக் கேட்பதாயினும் இரு கைகளையும் உயர்த்தி எழுந்து நின்று கூறல் – கேட்டலை மேற்கொள்வர். மேற்கு நாடுகளின் மாணவர்கள் தாம் அமர்ந்த இடத்தில் இருந்து கூறல் – கேட்டல் செய்வதை எவரும் குறையாகக் கருதுவதும் இல்லை.

அந்த வகையில் அவர்களை கௌரவித்து, மரியாதை செய்து, நினைவு கூறுவதற்கு வருடத்தில் ஒரு கணம், ஒரு ‘ஆசிரியர் தினம்’, அவசியம் தான்!!

ஆசிரியர் தினமன்று ஆசிரியர்களே எமக்காகப் பாடும் அற்புதமான பாடல்… பழைய நினைவுகளை மீட்டிப் பாருங்கள் நண்பர்களே….

தேசியரீதியில் தமிழ்மொழியில் இசைக்கப்படும் ஆசிரியர் கீதம்!

ஆ ஆ ஆ……ஆ ஆ ஆ……….

முத்து முத்தான சித்திரங்கள்
முற்றத்தில் சிந்திய ரத்தினங்கள் (முத்து)
பற்றும் பாசமும் வைத்தவற்றை
நல்ல பாதையில் சேர்க்கும் பணி எமதே! (2)
(முத்து)
அன்னை மடியில் அரவணைத்த பிள்ளை
பள்ளி வரும் பிஞ்சு பாலகனாய் (அன்னை)
அவன் தன்னம் தனிமையைப் போக்கிடவே
உள்ளத்தில் நம்பிக்கை அன்பை ஊற்றிடுவோம் (அவன்)
(முத்து)
எண்ணும் எழுத்தும் உணர்ந்திடுவோம்
உள்ள தேவைகள் அறிந்து பூர்த்தி செய்வோம் (எண்ணும்)
அவன் ஒழுங்குடன் ஒழுக்கமும் பேணி நல்ல
சிந்தை ஆற்றலை தூண்டிடுவோம் (அவன்)
(முத்து)
கற்பித்தல் கற்றல் நிகழ்ந்திடவே
நல்ல கட்டுப்பாட்டுடன் வகுப்பறையில் (கற்பித்தல்)
தினம் பெற்ற கடமையை பேணி ஏற்றே
ஞாலம் போற்றும் சமூகத்தை நாம் படைப்போம் (தினம்)

(முத்து)
சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும் Reviewed by Admin on October 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.