அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புதைகுழிக்கு இராணுவமே பொறுப்பு: ஈ.சரவணபவன் எம்.பி குற்றச்சாட்டு

"சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள மன்னார் மனிதப் புதைகுழிக்கு அரசும், இராணுவத்தினருமே முழுப் பொறுப்பு. இந்த விவகாரம் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு பெரும் சவாலாக அமையும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் சர்வதேச நிபுணர் குழுவை இலங்கைக்கு அழைத்து இந்த மாபெரும் மனிதப் புதைகுழி தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதனை இலங்கை அரசு செய்யுமானால் சர்வதேச சமூகத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று முன்தினம் வரை 36 முழுமையான எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் மனிதப் புதைகுழி சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் போர்க் காலத்தில் காணாமற்போன தமிழர்களுடையவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதி இராணுவத்தின் அறிவிக்கப்படாத உயர்பாதுகாப்பு வலயமாக இருந்துள்ளதுடன் அங்கு இராணுவத்தினரின் முகாம் ஒன்றும் இருந்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, கொலை செய்யப்பட்ட தமிழர்களை அங்கு இராணுவத்தினருக்குத் தெரியாமல் எவரும் புதைத்திருக்கமாட்டார்கள். இந்தப் புதைகுழிக்கு அரசும், இராணுவத்தினருமே முழுப் பொறுப்பாகும்.

குறித்த மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட மண்டையோடுகளில் நான்கு சிறுவர்களுடையதாக இருக்கின்றன. சிறுவர்களின் பற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, போர்க் காலத்தில் குடும்பத்துடன் காணாமற் போன தமிழர்களும் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கின்றது.

இதேவேளை, இந்தப் புதைகுழியிலிருந்து நேற்றுமுன்தினம் வரை மீட்கப்பட்டுள்ள 36 மண்டையோடுகளில் பல கடுமையான அடிகாயங்களால் நொறுங்கிக் காணப்படுகின்றன. மண்டையோடுகள் சிலவற்றில் துவாரங்கள் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டோரும், துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டோருமே இந்தப் புதை குழியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இவ்வாறான சந்தேகங்களுக்கான உண்மை கண்டறியப்பட வேண்டும். போர்க்காலத்தில் காணாமற்போனோரின் உறவினர்களை மரபணுச் சோதனைக்கு உட்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் சர்வதேச நிபுணர் குழுவை இலங்கைக்கு அழைக்க வேண்டும் என்றார்.

மன்னார் புதைகுழிக்கு இராணுவமே பொறுப்பு: ஈ.சரவணபவன் எம்.பி குற்றச்சாட்டு Reviewed by NEWMANNAR on January 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.