மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவும்'புதிய தளம்' சஞ்சிகை அறிமுகமும் - படங்கள்
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அரும்பணி மையமான கலையருவியில் இடம்பெற்றது. அன்றைய தினம் அதிகாலை பொங்கல் பொங்கும் நிகழ்வு தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் மன்னார் அமுதனின் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து அரங் நிகழ்வுகள் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியது
இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக பகுதி நேர விரிவுரையாளரும் பண்டிதருமான தமிழறிஞர் திரு. கடம்பேஸ்வரன் (யாழ்ப்பாணம்) அவர்கள் 'தமிழில் பிற துறைகள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். திரு. கடம்பேஸ்வரன் அவர்களை திருமதி சுஜான அப்துல் றஹ்மான் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.
தொடர்ந்து 'புதிய தளம்' என்ற பெயரில் வெளிவந்துள்ள சமூக, கலை, இலக்கிய, பண்பாட்டு இரு மாத இதழின் அறிமுகம் இடம்பெற்றது. இச்சஞ்சிகை பற்றிய அறிமுக உரையை இச்சஞ்சிகையின் ஆசிரியர் திரு. ந. இரவீந்திரன் (கொழும்பு) அவர்கள் வழங்கினார். இச்சஞ்சிகை பற்றிய மதிப்பீட்டுரையை மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. எம். சிவானந்தன் வழங்கினார். தொடர்ந்து கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.
இதைத்தொடர்ந்து கவியரங்கம் இடம்பெற்றது. நாவலாசிரியர் எஸ். ஏ. உதயா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கவியரங்கில் மன்னார் கவிஞர்களான மன்னார் அமுதன், நிசாந்தன், மயூறன், ஷிஹார் போன்றோர் கலந்துகொண்டனர். கிராமிய நடனம் போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு. அமல்ராஜ் றெவல் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுபெற்றன.
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவும்'புதிய தளம்' சஞ்சிகை அறிமுகமும் - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
January 18, 2014
Rating:
No comments:
Post a Comment