முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்கும் நிலையம் வடமாகாண முதலமைச்சரால் திறப்பு வைப்பு
வவுனியாவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதார பராமரிப்பு நிலையமொன்று வடமாகாண முதலமைச்சரினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட இந்த நிலையத்தில், முதற்கட்டமாக 20 பேரிற்கு சிகிச்சையளிக்க கூடிய வசதிகள் உள்ளன.
வடமாகாண சுகாதர அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்ட இந்த நிலையமானது, குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு தாமாக இயங்கமுடியாமல் உள்ளவர்களுக்கான சிகிச்சை வழங்கும் நிலையமாகும்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,
யுத்தத்தின் வடுக்களை ரணங்களாக சுமந்து தம்மை தாமே சுமையாக கருதி வாழ்க்கையில் துன்பப்படும் உறவுகளுக்கு இந்த நிலையம் அமைக்கப்படுவது என்பது காலத்தின் கட்டாயமாகும்.
எனவே இவ்வாறான ஒரு அவசியமான தேவையை முன்னுரிமைப்படுத்தி இந்த நிலையத்தை அமைப்பதற்கு முயற்சி எடுத்த வடமாகாண சுகாதார அமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
இந்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்கும் நிலையம் வடமாகாண முதலமைச்சரால் திறப்பு வைப்பு
Reviewed by NEWMANNAR
on
January 18, 2014
Rating:

No comments:
Post a Comment