மனித புதை குழியில் இருந்து மேலும் மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் தோண்டப்பட்ட போது மேலும் மூன்று மனித எலும்புக்கூடு உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் முன்னிலையில் 15 ஆவது தடவையாக குறித்த மனித புதை குழி இன்று திங்கட்கிழமை தோண்டப்பட்ட போதே குறித்த மனித எலும்புக்கூடுகள் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
இதே வேளை திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி உள்ள இடத்திற்கு வருகை தந்த குற்ற புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) மூன்றாவது நாளாக இன்று திங்கட்கிழமை தமது விசாரனைகளை அங்கு முன்னெடுத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி குறித்த மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக அன்று முதல் தற்போது வரை குறித்த புதை குழி தோண்டப்பட்டு வருகின்றது.
மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பான இடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு அங்கு பெட்டிகளில் பொதி செய்யப்படும் மனித எலும்புக்கூடுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை மதியம் 2 மணிவரை குறித்த பணிகள் இடம் பெற்றது.
மீண்டும் புதை குழி தோண்டும் பணி நாளை செவ்வாய்க்கிழமை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனித புதை குழியில் இருந்து மேலும் மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
January 27, 2014
Rating:

No comments:
Post a Comment