மன்னாரில் சோதனை நடவடிக்கையில் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்
மன்னாரில் கடந்த சில தினங்களாக படையினர் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மன்னார் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதியில் பல இடங்களில் இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் தனித்தனியாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியிலும் இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் தனித்தனியாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியால் வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அதில் பயணிப்பவர்களது அடையாள அடடை பரிசீலினை செய்யப்படுகின்றது.
வாகனங்களின் இலக்கங்களை பதிவு செய்து கொள்வதோடு எங்கிருந்து எங்கே செல்லுகின்றீர்கள் என்ற கேள்வியையும் கேட்கின்றனர்.
இதே வேளை மன்னார் நுழைவாயிலில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து சோதனைகளை மேற்கொள்ளுகின்றனர்.
மன்னார் தள்ளாடி அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக இராணுவத்தினர் வீதித்தடைகளை அமைத்து வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி சோதனைகளை மேற்கொள்ளுகின்றனர்.
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் உள்ள இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் காவலரன்கள் பலப்படுத்தப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடும் மக்களை கடும் சோதனைகளுக்கு உட்படுத்துகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னாரில் சோதனை நடவடிக்கையில் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்
Reviewed by NEWMANNAR
on
March 16, 2014
Rating:

No comments:
Post a Comment