மாயமான விமானம் விபத்துக்கு உள்ளானமைக்கான ஆதாரங்களை வெளியிட கோரிக்கை
காணாமற்போன மலேசிய விமானம் இந்து சமுத்திரத்தில் விபத்துக்குள்ளானமைக்கான ஆதாரங்களை வெளியிடுமாறு சீனா வலியுறுத்தியுள்ளது.
விமானம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாமையினால், இந்த கருத்து தொடர்பில் குழப்பமடைந்துள்ளதாக விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எனவே, விமானம் விபத்துக்குள்ளனதாக தீர்மானம் எடுப்பதற்கு காரணமாக ஆதாரங்கள் மலேசிய அதிகாரிகளால் முன்வைக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவானில் காணாமற்போன மலேசிய விமானம் இந்து சமுத்திரத்தில் விபத்துக்குள்ளானதாகவும், அதில் பயணித்தவர்கள் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் மலேசிய பிரதமர் நேற்றிரவு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
செய்மதி தகவல்களை அடிப்படையாகக்கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் நஜீப் ரசாக் குறிப்பிட்டிருந்தார்.
விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களுக்கு இந்த விடயம் குறுஞ்செய்தி மூலமாக மலேசிய எயார் லைன்ஸ் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் இருந்து கடந்த 8 ஆம் திகதி பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் பயணித்த மலேசிய விமானம் எம்.எச் 370 இடைநடுவே காணாமற்போயிருந்தது.
மலேசிய பிரதமரின் இந்த அறிவிப்பு, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தேடப்பட்டுவரும் மாயமான விமானம் தொடர்பான மிக முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகவே கருதப்படுகிறது.
அவுஸ்திரேலியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில், இந்திய பெருங்கடலின் தெற்கு கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகின்றது.
இதற்காக, ஆஸ்திரேலிய விமான தளத்தில் இருந்து அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மலேசியா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர் விமானங்கள் தேடுதல் நடவடிக்கைகளுக்காக இந்து சமுத்திர பகுதிக்கு தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாயமான விமானம் விபத்துக்கு உள்ளானமைக்கான ஆதாரங்களை வெளியிட கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
March 25, 2014
Rating:

No comments:
Post a Comment