உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில் அமைச்சர் சத்தியலிங்கம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு (ஆதாரங்கள் இணைப்பு)
வடமாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சின் 2013ம் வருடத்துக்கான உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில், அமைச்சர் ப.சத்தியலிங்கம் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்துள்ளமைக்கான உறுதியான ஆதாரங்களை முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கணபதிப்பிள்ளை கந்தசாமி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வடமாகாண வைத்தியசாலைகளுக்கான உலர் உணவு பெறுகை கேள்வி கோரல்களில் குறைந்த விலைகளில் கேள்வி கோரல்களை கோரிய விண்ணப்பதாரிகளை நிராகரித்து விட்டு, உச்ச விலை கோரியவருடன் அமைச்சர் சத்தியலிங்கம் ஒப்பந்தத்தை செய்துள்ளமை உறுதியாகியுள்ளது.
மோசடி பற்றி பல முறைப்பாடுகளை இரு முறைப்பாட்டாளர்கள் பலமுறை பல விதங்களில் தெரிவித்தும், கேள்வி கோரல் பெறுகை அறிவித்தல்களில் எவ்வித புதிய மாற்றங்களையும் கொண்டு வராமல், உரிய நடவடிக்கைகளை எடுக்காமல், ஒரு வருடத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட குறித்த ஒப்பந்தத்தை உச்ச விலை கோரியவருக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு அமைச்சர் சத்தியலிங்கம் நீடிப்பு செய்து கொடுத்துள்ளார்.
ஏழு பொருள்களில் மட்டும் சுமார் பத்து இலட்சம் ரூபாய்கள் மோசடி!
உச்ச விலை கோரியவருக்கு, வடமாகாண வைத்தியசாலைகளில் ஐந்து வைத்தியசாலைகளை ஒப்பந்தத்தில் வழங்கி, ‘பருப்பு, சீனி, தூள், அங்கர், வாழைப்பழம், தேங்காய், கத்தரிக்காய்‘ இந்த ஏழு பொருள்களில் மட்டும் மாதாந்தம் சுமார் பத்து இலட்சம் ரூபாய்களை மோசடி செய்து அமைச்சர் சத்தியலிங்கமும் குறித்த ஒப்பந்ததாரரும் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
காசு மேல் காசு பார்க்கும் இந்த மோசடிகள், ஊழல்கள், குணநலன்கள் போதாதென்று, 2014ம் 2015ம் வருடங்களுக்கான உலர் உணவு பெறுகை புதிய கேள்வி கோரல்களிலும், எவ்வித மாற்றங்களையும் செய்யாமல், குறித்த ஒப்பந்ததாரிக்கு ஐந்தாக இருந்த வைத்தியசாலைகளை ஒன்பதாக மாற்றிக்கொடுத்துள்ளார்.
முறைப்பாட்டாளர்கள் கோருவது என்ன?
நிதி மோசடிக்கு வழியேற்படுத்திக்கொடுக்கும் புதிய உலர் உணவு உசாவுகைகள் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும், நடைபெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட பணம் மீளப்பெறப்பட வேண்டும் என்றும் முறைப்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
அமைச்சர் சத்தியலிங்கத்தின் குடும்ப அரசியல், ஆட்சி அதிகாரம், பதவி பணி நிலை, சலுகைகள் வழங்கல்கள் தொடர்பில் உண்மையை எழுதிய வவுனியாவிலிருந்து வெளிவரும் வாரப்பத்திரிகையான “தினப்புயல்” பத்திரிகை அலுவலகத்தை, தோணிக்கல்-தேக்கவத்தையை சேர்ந்த தனது அடியாள் “கருணா குழுவை” வைத்து தாக்குதல் நடத்தியது போல், முறைப்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துவாரா சத்தியலிங்கம்? என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே!
வடமாகாண வைத்தியசாலைகளுக்கான உலர் உணவு பெறுகை உசாவுகை உள்ளடக்க பத்திரத்தின் 3ம், 4ம் பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் பச்சை நிறக்கோடுகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள (8வது பெறுகைகளினை சமர்ப்பித்தல் பகுதியில்) 8.4, 8.5, 8.6, 8.7, 8.8 விதிமுறைகளை பின்பற்றாமல், வடமாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சின் 2013ம் வருடத்துக்கான உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தை அமைச்சர் ப.சத்தியலிங்கம் செய்துள்ளமையும், 2014ம் 2015ம் வருடங்களுக்கான உலர் உணவு பெறுகை புதிய கேள்வி கோரல்களை வழங்கியுள்ளமையும் கவனிப்புக்குரியதாகும்.
உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில் அமைச்சர் சத்தியலிங்கம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு (ஆதாரங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:








No comments:
Post a Comment