நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை வட மாகாண முதலமைச்சரை சந்தித்தது
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தலைமைத்துவ சபை மேற்கொண்ட வட மாகாணத்திற்கான கள விஜயத்தின்போது வட மாகாண முதலமைச்சர் CV.விக்னேஸ்வரன் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை (03.04.2014) மாலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தளத்தில் சந்தித்துக் கலந்துரையாடியது.
இச் சந்திப்பில் வட மாகாண முதலைமச்சர் CV.விக்னேஸ்வரன், வட மாகாண விவசாய அமைச்சர் கலாநிதி.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்டதோடு NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), அஷ்ஷெய்க் MR.நஜா முஹம்மத் (இஸ்லாஹி), பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப், சகோ.சிராஜ் மஸ்ஹூர், சகோ.முஜீபுர் ரஹ்மான், சகோ.ஹானான், மற்றும் சகோ.ஸப்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது புல்மோட்டை முஸ்லிம் மீனவர்கள் எதிர்கொள்ளும் மீன்பிடித் தடைகள் தொடர்பில் முதலமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது. புல்மோட்டை மீனவர்கள் பயன்படுத்தும் கொக்கிளாய் கடல் நீர் ஏரியின் ஒரு பகுதியானது முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக எலைக்குட்பட்ட ஒரு பகுதியாகும். இதனால் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் நிர்வாகக் கெடுபிடிகள் காரணமாகவே இம்மீனவர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் துரித நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு முதலைமைச்சரிடம் NFGGயின் தலைமைத்துவ சபையினர் கேட்டுக்கொண்டனர். அதேவேளை புல்மோட்டை மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் துரித தீர்வுகளை எட்டும் நோக்கிலும் அவர்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களிடம் NFGGயின் தலைமைத்துவ சபையினர் வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும் இது தொடர்பாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சரோடு கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
அத்தோடு முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு பேசப்பட்டது. குறிப்பாக மன்னார் மாவட்ட மறிச்சுக்கட்டி, மரைக்கார் தீவு மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களினால் விளக்கமளிக்கப்பட்டது. இது தொடர்பிலும் தாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் உறுதியளித்தார். அத்துடன் வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நியமிக்கப்படவிருக்கும் குழு தொடர்பாகவும் பேசப்பட்டது. இந்நியமனத்தை தான் அவசரமாக நியமிக்க எண்ணியுள்ளபோதிலும், வட மாகாண சபைக்கான சட்ட நியமங்களை அங்கீகரிக்கின்ற வேலைத் திட்டங்கள் காரணமாக சற்றுத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சட்ட நியமத்திற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதும் ஒரு மாத கால இடைவெளியில் தாம் மேற்படிக் குழுவினை நியமிப்பதாகவும் முதலமைச்சர் CV.விக்னேஸ்வரன் NFGGயின் தலைமைத்துவ சபையினரிடம் வாக்குறுதி அளித்தார்.
அத்தோடு மேற்படி சந்திப்பில் வட மாகாண சபையில் நல்லாட்சித் தத்துவங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எமது NFGGயின் வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களினால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை அமுல் படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் தாம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும். இது தொடர்பாக Transparancy International நிறுவனத்தோடு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் உதவியைப் பெற்று வட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நல்லாட்சி நடைமுறைகள் தொடர்பில் பயிற்சிகள் அளிக்பப்படவுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். அத்துடன் மாகாணசபையில் நல்லாட்சி ஒழுங்குகளை அமுல்படுத்த தாம் பெரிதும் விரும்புவதாகவும் வட மாகாண முதலமைச்சர் CV.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை வட மாகாண முதலமைச்சரை சந்தித்தது
Reviewed by NEWMANNAR
on
April 06, 2014
Rating:
No comments:
Post a Comment