இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனின் வாரிசு: தமிழகத்தில் கண்டுபிடிப்பு
இந்தியாவிற்கு ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிய முதல் மனிதனின் வாரிசு தமிழகத்தில் இருப்பதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ராமசாமி பிச்சப்பன் தலைமையிலான குழு ஆக்ஸ்போர்ட் ஆய்வு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 1 லட்சம் டிஎன்ஏ மாதிரிகளை இந்தக் குழு ஆய்வு செய்து, ஒத்த மரபணுக்களைக் கொண்ட மனிதனைக் கண்டுபிடிப்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
மதுரை அருகே ஜோதிமாணிக்கம் கிராமத்தில் வசிக்கும் விருமாண்டித் தேவர் என்ற 30 வயது நபரின் மரபணு, கிட்டத்தட்ட 70,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய ஆப்பிரிக்க மனிதர்களின் மரபணுவோடு ஒத்துப் போவதாக இந்த குழுவினர் கூறியுள்ளனர்.
இந்த நபரின் மரபணு எம் 130 வகையாகும், இதுதான் இந்தியாவில் தற்போதைய திகதியில் மிகவும் பழமையான மரபணு என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனின் வாரிசு என்ற பெருமையைப் விருமாண்டி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விருமாண்டி பரம்பரையின் முன்னோர்கள் சிலர் அவுஸ்திரேலியாவின் வனப்பகுதியில் இப்போதும் இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
மேலும் ஜோதிமாணிக்கம் கிராமத்தில் வசிப்பவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்து வந்த முதல் மனிதர்களின் வாரிசுகளாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
கடந்த 2005ம் ஆண்டு முதல் இதுதொடர்பான ஆய்வுகளில் அமெரிக்க பல்கலைக்கழக மரபியல் நிபுணர் ஸ்பென்ஸர் வெல்ஸ் மற்றும் தமிழக குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இதுபற்றி வெல்ஸ் கூறுகையில், ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பிய மனித குலம், சிந்து சமவெளி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தென் இந்தியா வழியாக அவுஸ்திரேலியா வரை சென்றதாகவும், இந்தியாவில் மனித குலம் தழைக்க தென்இந்தியா முக்கியப் பங்கு வகித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனின் வாரிசு: தமிழகத்தில் கண்டுபிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 31, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 31, 2014
Rating:


No comments:
Post a Comment