அண்மைய செய்திகள்

recent
-

சாட்சியமளிக்கவருவோரை அவமானப்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு-சுமந்திரன்

காணாமல் போனோர் தொடர்பாக உரிய முறையில் விசாரணை செய்யாமலும் சாட்சியமளிக்கவருவோரை அவமானப்படுத்தும் வகையிலும் நடந்து கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு காணாமல் போனோர் தொடர்பாக அளிக்கப்படும் சாட்சியங்களை எவ்வாறு மிகைப்படுத்தப்பட்டவையென்று கூற முடியும் இதை கூட்டமைப்பு கண்டித்துள்ளது.


இது குறித்து கூட்டமைப்பின் பிரமுகரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்;

பெற்றோர் தமது பிள்ளைகளையும் மனைவியர் தமது கணவன்மாரையும் உறவினர்கள் தமது சொந்தங்களையும் அடைக்கலமாக இராணுவத்தினரிடம் ஒப்படைத்தமைக்கான ஆயிரக்கணக்கான சான்றுகளும் சாட்சியங்களும் இருக்கின்ற போது காணாமல் போனோர் தொடர்பில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் பொய்யானவை மிகைப்படுத்தப்பட்டவையென காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகள் நடாத்தி வரும் விசாரணைக் குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆணைக்குழுவின் தலைவர் என்ன அடிப்படையில் இதைக் கூறியிருக்கிறார் என்று தெரியவில்லை. காணாமல் போனோர் சம்மந்தமான விசாரணை தற்பொழுது மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நான் அங்கு சென்றிருந்தேன். பெருமளவான தாய்மார் மனைவிமார் தமது சாட்சியங்களை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே முறையிட்டு பதிந்து கொண்டவர்களை தெரிவு செய்து ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்து கொண்டிருந்தது. இந்த தெரிவு எப்படி நடைபெற்றுள்ளது என்பதும் ஒரு கேள்விக்குரிய விடயமாகும். சாட்சியமளிக்கும் ஒவ்வொருவரும் யார் தமது உறுவுகளை பிடித்துக் கொண்டு போனார்கள் எவ்விடத்தில் வைத்து சம்பவம் நடைபெற்றது யாரிடம் ஒப்படைத்தோம்? எங்கு வைத்துப்பிடித்தனர்,  தாம் கடைசியாக தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தமை தொடர்பில் ஆதாரத்துடன் கூறியிருக்கிறார்கள். ஆனால் விசாரணையாளர்களோ மேற்கொண்டு தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய முடியாமல் பூசி மெழுகப் பார்க்கிறார்கள். கையேற்று சென்றவர்கள் யார் எவ்விடத்தில் வைத்து கூட்டிச் சென்றார்கள் என்ற எந்த விடயமுமே விசாரணையின் போது கேட்கப்படவில்லை. இப்படி விசாரணையென்ற போர்வையில் பூசி மெழுகிக் கொண்டு சாட்சியங்கள் மிகைப்படுத்தபட்டவையென எவ்வாறு ஆணைக்குழுத் தலைவர் கூற முடியும். முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென பணிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஆணைக்குழுவினர் ஆழமான விசாரணைகள் எதையும் செய்யாமல் கதைகேட்பது போல கேட்டு விட்டு சரி நீங்கள் போய் வாங்கள் நாங்கள் விசாரிக்கிறோமென்று சொல்லி அனுப்புகிறார்கள். எனவே விசாரணையென்ற நடவடிக்கை முறையாக நடைபெறுவதாக தெரிய வில்லை.

இது இவ்வாறு இருக்க தங்களுடைய உண்மையான ஆதங்கத்தையும் அவலங்களையும் சொல்ல முனைகிற மக்களை அவமானப்படுத்துகின்ற விதத்தில் ஆணைக்குழுவினர் நடந்து கொள்கின்றார்கள். இது மக்களின் அவலத்தை உதாசீனப்படுத்துகின்ற மிகவும் மோசமான செயலாகும்.

ஆகவே, ஆணைக்குழுவின் இம்முறையற்ற விசாரணைகள் கண்டனத்துக்குரியது. விசாரணைக் குழுவின் கண்துடைப்பு நாடகத்தை வெளிக் கொண்டு வரும் ஒரு செயலாகவே பார்க்கப்பட வேண்டும். விசாரணையென்ற போர்வையில் உலகத்தை ஏமாற்றும் இந்த நடவடிக்கைகளை கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. அது மட்டுமின்றி விசாரணை முடிவதற்கு முன் விசாரணை பற்றி தீர்ப்புச் சொல்லும் அதிகாரம் யார் இவர்களுக்கு வழங்கியுள்ளார்கள் எனத் தெரியவில்லையென சுமந்திரன் தெரிவித்தார்.
சாட்சியமளிக்கவருவோரை அவமானப்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு-சுமந்திரன் Reviewed by NEWMANNAR on August 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.