மங்கள்யானை விண்ணுக்கு அனுப்பிய சுப்பையா அருணன்; ஒரு கிராமத்து விஞ்ஞானி
இந்திய அறிவியலில் மிகப்பெரிய சாதனை இன்றைய தினம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பூமியில் இருந்து புறப்பட்ட மங்கள்யான் செவ்வாயை அடைந்த தினம் இன்று.
ன்றைக்கு உலகமே இந்தியாவின் சாதனையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் மங்கள்யான். செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் ‘மங்கள்யான்’ திட்டத்தின் தூணாக இருந்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன்! இவர் ஒரு தமிழர் அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து விஞ்ஞானி.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ்ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்ய அருணன் வகுத்த வியூகம் அளப்பறியது.
ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து நவம்பர் 5ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட “மங்கள்யான்’ செயற்கைகோள் இன்று வெற்றிகரமாக செவ்வாய் கோளை அடைந்துள்ளது. மிகுந்த சிக்கலான, பல நாடுகளில் பல்வேறு கட்டங்களில் பின்னடைவைச் சந்தித்த ‘மார்ஸ் மிஷன்’ திட்டத்தை மிகக் குறைந்த செலவில், வெற்றிகரமாக நிறைவேற்றியவர் அருணன்.
“மங்கள்யான்’ செயற்கைகோள் பணியின், திட்ட இயக்குனராக பணியாற்றிய சுப்பையா அருணன், நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர் அருணன், திருக்குறுங்குடி பாடசாலையிலும் பாளையங்கோட்டை சேவியர் பாடசாலையிலும் பயின்றுள்ளார். பின்னர், கோவை கல்லூரியில் இயந்திர பொறியியலில் பட்டம் பெற்றார். 1984இல் திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியை தொடங்கினார். தற்போது, பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் பணிபுரிகிறார்.
திருவனந்தபுரம் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணன் என்பவரது மூத்த சகோதரியின் மகன் தான் அருணன். 1994இல் விண்வெளி இரகசியங்களை மாலைத்தீவு பெண்களுக்கு கொடுத்ததாக, நம்பி நாராயணன் கைதுசெய்யப்பட்டார் பின்னர், அந்த குற்றச்சாட்டு பொய்யென நிரூபிக்கப்பட்டு, அதற்காக, நம்பி நாராயணனிடம் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர்.
நம்பி நாராயணனின் மகள் கீதாவை தான், சுப்பையா அருணன் திருமணம் செய்துள்ளார். இவர்கள், தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கின்றனர். கீதா ஆசிரியையாக பணியாற்றுகிறார். அருணனின் அண்ணன் நல்லமுத்து வனவிலங்கு புகைப்பட கலைஞராகவும், தம்பி குமரன் சென்னையில் சினிமா இசை அமைப்பாளராகவும் உள்ளனர்.
அருணனிற்கு பாரிவள்ளல், லதா சங்கரி என சகோதர, சகோதரிகள் உள்ளனர். அருணன் குடும்பத்தினர், 15 ஆண்டுகளுக்கு முன்பே சொந்த ஊரை விட்டு வெளியேறிவிட்டாலும், பாடசாலை தலைமையாசிரியரின் மகன் என்ற முறையில், விஞ்ஞானி அருணனை கோதைசேரி கிராம மக்கள் தெரிந்து வைத்துள்ளனர்.
மங்கள்யான் திட்டத்தை முழுமையாக உள்வாங்கி, இஸ்ரோவின் பல்வேறு பிரிவு வல்லுனர்களில் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் கலந்து ஆலோசித்துத் திட்டமிட்டு, மொத்த திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளார் சுப்பையா அருணன்.
மங்கள்யானை விண்ணுக்கு அனுப்பிய சுப்பையா அருணன்; ஒரு கிராமத்து விஞ்ஞானி
Reviewed by NEWMANNAR
on
September 24, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 24, 2014
Rating:


No comments:
Post a Comment