மன்னார் வெள்ளாங்குளத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து தமிழீழ காவல் துறையின் முன்னா ள் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக கொலை.-Photo
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த தமிழீழ காவல் துறையின் முன்னாள் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன்(வயது-40) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று புதன் கிழமை (12) இரவு 8.30 மணியளவில் அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி கருத்து தெரிவிக்கையில்,,,
நேற்று புதன் கிழமை (12) இரவு 7 மணியளவில் தனது வீட்டு வளாகத்தினுள் வீட்டு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்திய வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெற்ற நிலையில் தனது உறவினர்கள் சிலருடன் இணைந்து கல் அரிந்து கொண்டிருந்தார்.
இதன் போது வீட்டைச் சுற்றி மின் குமிழ்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தது.இதன் போது இரவு 8.30 மணியளவில் துவக்குச் சூட்டு சத்தம் ஒன்று கேட்டது.
அப்போது நாங்கள் அதனைப் பற்றி சிந்திக்கவில்லை.இந்த நிலையில் எனது சகோதரன் கத்தி சத்தம் போட்டு என்னை கூப்பிட்டார்.உடனடியாக விரைந்து சென்றேன்.
அப்போது எனது கணவர் இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார்.தலைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு பட்டிருப்பதை நான் உணர்ந்தேன்.என்னால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் எனது அழுகுரல் சத்தத்தை கேட்டு அயலவர்கள் திரண்டனர்.பின் நான் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் விரைந்து வந்தனர்.அப்போது எனது கணவர் இறந்து விட்டார்.
எனது கணவர் விடுதலைப்புலிகளின் காவல் துறையில் கடமையாற்றி பின் இலங்கை அரசிடம் புனர்வாழ்வு பெற்று கடந்த 2012 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இணைக்கப்பட்டார்.
அன்று முதல் இன்று வரை சுய தொழில் செய்து குடும்பத்தை காத்து வந்தார்.கிராம மக்களின் நலனுக்காகவும் இக்கிராமத்திற்காகவும் தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்.எனது கணவருக்கு எதிரிகள் யாரும் இல்லை.
கடந்த வாரம் எங்களுடைய வீட்டிற்கு வந்த இருவர் கடும் தொனியில் எனது கணவரின் பெயரை சொல்லி அழைத்து விட்டுச் சென்றனர்.எனது கணவர் வீடு திரும்பியவுடன் இச்சம்பவம் தொடர்பில் நான் அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர் என்னிடம் கூறினார் எனக்கு எதிரிகள் யாரும் இல்லை என கூறினார்.இந்த நிலையிலே இவருக்கு இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழீழ காவல் துறையின் முன்னாள் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன்(வயது-40) என்பவரது மனைவி தெரிவித்தார்.
இந்த நிலையில் சம்பவம் இடம் பெற்ற வீட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும்,பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸாரும் வருகை தந்திருந்தனர்.
இலுப்பைக்கடவை பொலிஸார் மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று காலை(13) சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டதோடு சடலப்பரிசோதனையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது குறித்த கிராமத்தில் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் இடம் பெற்ற வீட்டிற்கு செல்வதற்கு வேறு இடங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.குறித்த வீட்டில் சம்பவம் இடம் பெற்ற பகுதியில் இராணுவமும்,பொலிஸாரும் இணைந்து தடையங்களை தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தினை தொடர்ந்து அக்கிராம மக்கள் மத்தில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் வீட்டிற்கு மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம்,சமூக சேவையாளர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் கத்தோலிக்க அருட்தந்தையர்கள் ஆகியோர் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மன்னார் வெள்ளாங்குளத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து தமிழீழ காவல் துறையின் முன்னா ள் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக கொலை.-Photo
Reviewed by NEWMANNAR
on
November 13, 2014
Rating:

No comments:
Post a Comment