ஜனாதிபதி மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியுமா?; கலந்தாலோசனையில் நீதியரசர்கள் குழாம்…
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில், ஆதரவாகவும், எதிராகவும் 38 எழுத்துமூல விளக்கங்கள் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுள்ளன.
இந்த விடயம் தொடர்பில், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் கே ஸ்ரீபவன், சந்ரா ஏக்கநாயக்க, பிரியநாத் டெப், ஈவா வனசுந்தர, ரோஹினி மாறசிங்க, புவனேக அலவிஹார, சரத் டி அப்றூ, சிசிர டி அப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஆராயப்பட்டு வருகின்றது.
தற்போது நீதியரசர்கள் குழாம் இந்த விடயம் தொடர்பில் இறுதிக்கட்டமாக அவர்களின் தீர்மானம் தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் மிகவும் முக்கியமானது என்பதால், இன்றிரவு 12 மணிவரை இறுதி ஆலோசனையை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் மஹேஷி ஜயசேகர தெரிவித்தார்.
இன்றோ அல்லது அதற்கு முன்னரோ நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஜனாதிபதியால் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரி, அனுப்பிவைக்கப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதேவேளை, இந்த விடயம் நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தும் ஒரு தலைப்பு என்பதால், பகிரங்க நீதிமன்றத்தில் வாய்மூல விளக்கங்களை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென எழுத்துமூல விளக்கங்களை சமர்ப்பித்துள்ள சட்டத்தரணிகள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பகிரங்க நீதிமன்றத்தில் வாய்மூல விளக்கங்களை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இரண்டு மனுக்களை சமர்ப்பித்துள்ள போதிலும், அதற்கு இதுவரை பதில் வழங்கப்படவில்லை என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரண குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியுமா?; கலந்தாலோசனையில் நீதியரசர்கள் குழாம்…
Reviewed by NEWMANNAR
on
November 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 10, 2014
Rating:


No comments:
Post a Comment