மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள சுமார் 60 வருடங்கள் பழைமை வாய்ந்த சிதைவடைந்த நீர்த்தாங்கியை அகற்ற நடவடிக்கை.- Photo
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள சுமார் 60 வருடங்கள் பழைமை வாய்ந்த சிதைவடைந்த நிலையில் காணப்படும் அதியுயர் நீர்த்தாங்கியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மன்னார் நகர சபை முன்னெடுத்துள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவது தொடர்பில் நேற்று புதன் கிழமை(5) மாலை மன்னார் நகர சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள மன்னார் பொது விளையாட்டு மைதானத்தினுள் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த,மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் காணப்பட்ட அதியுயர் நீர்த்தாங்கியை அகற்றுவது தொடர்பில் மன்னார் நகர சபை நீண்டகாலமாக நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளை தொடர்ந்து உடனடியாக குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவது குறித்து நேற்று புதன் கிழமை(5) மன்னார் நகர சபையில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் அவசர கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபை உறுப்பினர் மெரினஸ் பெரேரா,தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள்,இலங்கை மின்சார சபை அதிகாரிகள்,அரச,தனியார் கோக்குவரத்துச் சங்க அதிகாரிகள்,வீதி போக்கு வரத்துப்பிரிவு பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மன்னார் நகர சபையுடன் இணைந்து ஒப்பந்த காரர்களை நியமித்து குறித்த நீர்த்தாங்கியை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் 11 ஆம் திகதி குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலத்தினுள் முடிவடையவுள்ளது.என அவர் தெரிவித்தார்.குறித்த நீர்த்தாங்கி கடந்த யுத்த காலத்தில் கடுமையான சிதைவுகளுக்கு உள்ளாகிய நிலையில் காணப்படுகின்றது.மைதானத்தில் விளையாடுகின்ற போது சில விளையாட்டு வீரர்களுக்கு காயங்கள் ஏற்படுத்திய சில சம்பவங்களும் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையிலே மக்களின் கோரிக்கைக்கு அமைவாக உடனடியாக இந்த வேலைத்திட்டத்தை மன்னார் நகர சபை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையடன் இணைந்து குறித்த நீர்த்தாங்கியினை அகற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.குறித்த பணி ஆரம்பிக்கபடும் போது போக்குவரத்து பாதைகளும் மாற்றப்பட்டுள்ளது.
அது தொடர்பில் உரிய முறையில் மன்னார் நகர சபையினால் மக்களுக்கு அறிவிக்கப்படும்.என மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள சுமார் 60 வருடங்கள் பழைமை வாய்ந்த சிதைவடைந்த நீர்த்தாங்கியை அகற்ற நடவடிக்கை.- Photo
Reviewed by NEWMANNAR
on
November 06, 2014
Rating:

No comments:
Post a Comment