அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்களவர் குடியேறியுள்ள வெலி ஓயாவிற்கு வடமாகாண சபை நிதியை ஒதுக்கக் கூடாது : சபையில் ரவிகரன் போராட்டம்

வடக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட வெலிஓயா பிரதேசத்திற்கு நிதியை ஒதுக்கக்கூடாது எனக் கோரிக்கை விடுத்த இம்மாகாண சபையின் உறுப்பினர் து.ரவிகரன், வெலிஓயா எனத் தற்பொழுது அழைக்கப்படுகின்ற பகுதியான மணலாற்றில் பல ஆயிரக்கணக்கான பரப்பளவுடைய தமிழ் மக்களுக்கு செந்தமான காணிகள் அபகிக்கப்படுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் செந்தமான காணிகளுக்கு எமது மக்களிடம் தோம்பு காலத்து ஆவணங்களும், அறுதி உறுதிகளும், காணி அனுமதிப்பத்திரங்களும் உள்ளன. எனவே இந்த நிலங்களை மீட்பதற்குரிய சட்ட நடவடிக்கைகளை மாகாண சபையின் ஊடாக விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையில் 2015 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மீதான விவாதம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கில் நில ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக தமிழ் மக்களுக்குச் செந்தமான பல காணிகள் குடியேற்றத்திற்காகவும் வேறு தோவைகளுக்காகவும் அபகரிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறுப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் விவசாய பூமிகள் அபகரக்கிப்பட்டு தென்பகுதியினரைக் குடியமர்த்தியுள்ளனர். இப் பிரதேசத்தை வெலிஓயா என்ற பெயருடன் தற்பொழுது முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்து அங்கு குடியேற்றப்பட்டுள்ளவர்களுக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் முல்லைத்தீவில் கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் போன்ற பகுதிகள் உள்ளடங்கலாக தமிழ் மக்கள் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மிகவும் பாதிப்படைந்த நிலையில் உள்ளனர்.

இதேவேளை, வெலிஓயா என்ற பிரதேசத்தை முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைப்பதற்கான முறையான அறிவித்தல்கள் எதுவுமே இன்னமும் வெளியிடப்படவில்லை. இதேபோல் எமது மாகாண சபையிலும் இந்தவிடயம் ஆராயப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு மணலாற்றுப் பகுதியில் அடாத்தாக அபகரித்து சிங்கள மக்கள் குடியேறியுள்ள காணிகளுக்கு தமிழ் மக்களிடம் தோம்பு காலத்து ஆவணங்களும், அறுதி உறுதிகளும், காணி அனுமதிப்பத்திரங்களும் உள்ளன. இந்த நிலங்கள் எமது தமிழ் மக்களின் வளம் நிறைந்த விவசாய பூமியாகும். எனவே இந்த நிலங்களை மீட்பதற்குரிய சட்ட நடவடிக்கைகளை மாகாண சபையின் ஊடாக மேற்கொள்ள வேண்டும்.

எனவே, தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்ளைக் குடியமர்த்தியுள்ள பிரதேசத்திற்கு எமது மாகாண சபையின் ஊடாக நிதி ஒதுக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இந்த விடயம் தொடர்பாக சபையில் காரசாரமான விவாதங்கள் இடம் பெற்றன. இறுதியில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இவ்விடயம் தொடர்பில் சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் ஆராய்ந்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொண்டு வடக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான பாதீடு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்களவர் குடியேறியுள்ள வெலி ஓயாவிற்கு வடமாகாண சபை நிதியை ஒதுக்கக் கூடாது : சபையில் ரவிகரன் போராட்டம் Reviewed by NEWMANNAR on December 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.