கூட்டமைப்பின் இளைஞரணி பொதுச் செயலாளரின் கூற்று கண்டனத்துக்குரியது! அம்பாறை மாவட்ட இளைஞரணி அறிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணி பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரனின் கூற்று கண்டனத்துக்குரியது. இது கட்சியின் தலைமைப்பீடத்தையும் கட்டுக்கோப்பையும் அவமதிக்கும் பாரதூரமான செயலாகும். அவரது கூற்றை நாம் ஏற்க முடியாது.
இவ்வாறு அம்பாறை மாவட்ட இளைஞரணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பு முக்கியஸ்தருமான கே.ஜெயசிறில், செயலாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான கே.ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து இவ்வறிக்கையை விடுத்துள்ளனர்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நாட்டின் சமகால அரசியல் நிலைவரங்களை ஆற அமர சிந்தித்து வடக்கு கிழக்கின் சகல பாகங்களுக்கும் சென்று பிரதிநிதிகளதும் மக்களதும் கருத்துக்களை அறிந்தபின் தான் தலைமைப்பீடம் அம் முடிவை வெளியிட்டது.
பெரும்பான்மையான மக்களது பிரதிநிதிகளது கருத்துக்களை பொது முடிவாக அறிவிக்க முடியுமே தவிர ஒரு சிலரின் அபிலாசைகளை பிரதிபலிக்க முடியாது. அப்படி சிலரின் அபிப்பிராயத்தை மட்டும் வைத்துக் கொண்டு அறிவித்தால் பெரும்பான்மை மக்களுக்கு என்ன பதில் சொல்வது?
தலைமைப்பீடம் ஒரு முடிவை அறிவித்துவிட்டால் அதற்கமைவாக செயற்பட வேண்டியது கட்சிக் கொள்ளைகளைக் கடைப்பிடிப்பவனதும் உறுப்பினரதும் கடமையாகும். அதை விடுத்து கட்சி எடுத்த முடிவை கண்டனம் செய்வதும் விமர்சிப்பதும் உண்மையான உறுப்பினனுக்கு அழகல்ல.
அப்படியெனின் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முற்பட்ட வேளையில் இவ் எதிர்ப்பைக் காட்டியிருக்கலாமே. அவ்வேளை மௌனமாகவிருந்து விட்டு இப்பொழுது அதுவும் இன்னும் ஓரிரு நாட்களிருக்கையில் இவ்வகையான அறிவித்தலை பொறுப்பு வாய்ந்தவர் விடுப்பதென்பது ஒட்டுமொத்த தமழ்த் தேசியத்தைப் பாதிப்பதாக அமையும் என்று நாம் கருதுகின்றோம்.
பொதுச் செயலாளர் சிவகரன் விடுத்த அறிக்கை அவரது தனிப்பட்ட அறிக்கையாகலாம். அது ஒட்டுமொத்த இளைஞர் அணியின் முடிவாகாது. எனவே அம்பாறை மாவட்ட அணி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
நாம் எப்பவும் கட்சிக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டு விசுவாசமாக வந்திருக்கிறோம். ஏன் சிவகரனின் செயற்பாட்டில் பாரபட்சம் காணப்பட்ட போதிலும் கூட நாம் கட்சியின் பெயருக்காக அதனைப் பொருட்படுத்தாது பொறுத்து வந்திருக்கிறோம்.
எனவே அகில உலகமே எம்மை பார்த்துக் கொண்டிருக்கின்ற தருணத்தில் இப்படியான அறிக்கைகளை விட்டு எதிரணிக்குத் தீனி போடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கூட்டமைப்பின் இளைஞரணி பொதுச் செயலாளரின் கூற்று கண்டனத்துக்குரியது! அம்பாறை மாவட்ட இளைஞரணி அறிக்கை
Reviewed by NEWMANNAR
on
January 05, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 05, 2015
Rating:


No comments:
Post a Comment