அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கில் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதில்லை: சம்பந்தன் தலைமையில் இன்று தீர்மானம்


கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி த.தே.கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும். அதனை வேறு யாருக்கும் விட்டுக்கொடுப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் விசேட கூட்டம் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வடக்கிழக்கில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

இந்த கூட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருகின்றன. பல்வேறு தரப்பினருடனும் பல பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனிக்கட்சியாக அதிக ஆசனங்களைக் கொண்டுள்ளது.

நாங்கள் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த நிலையில் முதலமைச்சர் தொடர்பில் பல்வேறு நிலைப்பாடுகளை பல கட்சிகள் கொண்டுள்ளன. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அந்த முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் நாங்கள் பல பாதிப்புகளை எதிர்நோக்கிவந்தோம். எமது சமூகத்துக்கு நாங்கள் ஆற்றவேண்டிய பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு உள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை மாற்றத்திற்காக புதிய ஜனாதிபதிக்கு வாக்களிக்கச் செய்வதில் நாங்கள் பெரும் பங்காற்றியுள்ளோம். குறிப்பாக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பெருமளவில் தமது வாக்குகளை புதிய ஜனாதிபதிக்கு அளித்துள்ளனர்.

இந்த நிலையில் புதிய அரசாங்கம் ஒரு நல்லெண்ண சமிக்ஞையை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்த கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கான அனைத்து நல்லெணத்தினையும் வெளிப்படுத்தும் என நாங்கள் நம்புகின்றோம்.

புதிய அரசாங்கத்துடன் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகார பங்கீடு தொடர்பிலான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அமைப்புக்கு பச்சைக்கொடி காட்டி தமிழ் மக்களுக்கு நம்பிக்கை நிலையினை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

கடந்த காலத்தில் மாறிமாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வந்ததாகவே தமிழ் மக்கள் கருதிவருகின்றனர். அந்த நிலையினை இந்த அரசாங்கம் மாற்றும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் அங்கம்வகிக்காத நிலையில் கிழக்கு மாகாண சபையினை கொண்டு தமது கிழக்கு மாகாண மக்களுக்கு சேவையாற்ற முனையும் இந்த நிலையில் அரசாங்கம் அதற்கு பூரண ஆதரவு வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எனவே கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஆதரவினையும் அரசாங்கம் வழங்கும் என நம்புகின்றோம்.

தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தினை சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தாது என தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.


கிழக்கில் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதில்லை: சம்பந்தன் தலைமையில் இன்று தீர்மானம் Reviewed by NEWMANNAR on January 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.