1942 ஆம் ஆண்டு மூழ்கிய கப்பலில் வௌ்ளிப் புதையல்
942 ஆம் ஆண்டு மும்பையிலிருந்து இங்கிலாந்திற்கு நாணயங்களை ஏற்றிச் செல்லும்போது கடலில் மூழ்கிய சிட்டி ஆஃப் கெய்ரோ என்ற கப்பலின் சிதிலங்களிலிருந்து 50 மில்லியன் டொலர் மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.
SS City Of Cairo என்ற இந்தக் கப்பல் செயிண்ட் ஹெலனாவுக்குத் தெற்கில் 772 கி.மீ. தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஜெர்மனியைச் சேர்ந்த யு – போட் அதனை குண்டுவீசித் தாக்கியது.
இத்தாக்குதலால் அந்தக் கப்பல் 5,150 மீட்டர் ஆழத்தில் மூழ்கியது.
இதில் 100 டன் எடையுள்ள வெள்ளி நாணயங்கள் இருந்தன. இந்த நாணயங்கள் பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமானவை.
இங்கிலாந்தின் யுத்த செலவுக்காக இந்த பணம் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், 1942 நவம்பர் 6 ஆம் திகதியன்று இந்தக் கப்பலைக் கண்ட யு-போட் அதன் மீது குண்டு வீசியது.
கப்பலைக் கைவிட்டுவிட்டு, தப்பிக்க ஊழியர்கள் முயற்சித்துக்கொண்டிருந்த நிலையில், சிட்டி ஆஃப் கெய்ரோ மீது இன்னொரு குண்டும் வீசப்பட்டது. அதோடு, அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது.
இந்தக் கப்பலும் அதிலிருந்த நாணயங்களும் தொலைந்து போய்விட்டன என்றுதான் 2011ஆம் ஆண்டுவரை கருதப்பட்டது.
2011ஆம் ஆண்டில், தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் ஜான் கிங்க்ஸ்ஃபர்ட் என்ற பிரிட்டிஷ் மீட்பு நிபுணர் தலைமையிலான அணி சோதனை நடத்தியது.
இதன்போது, குறித்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதிலிருந்த 34 மில்லியன் பவுண்ட் புதையலில் பெருமளவு மீட்கப்பட்டது.
அந்தக் காசுகள் தற்போது பிரிட்டனில் உருக்கப்பட்டு, விற்கப்பட்டுவிட்டன. இதிலிருந்து கிடைக்கும் தொகை, அரசுக்கும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
இந்தப் பணி, 2013 செப்டம்பரிலேயே முடிந்துவிட்டது. ஆனால், இது பற்றிய தகவல்களை வெளியில் சொல்வதற்கு பிரிட்டனின் போக்குவரத்துத்துறை அமைச்சகம் இப்போதுதான் அனுமதியளித்துள்ளது.
1942 ஆம் ஆண்டு மூழ்கிய கப்பலில் வௌ்ளிப் புதையல்
Reviewed by NEWMANNAR
on
April 16, 2015
Rating:

No comments:
Post a Comment