நேபாளத்தில் இரண்டாவது நாளாக நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக மிகவும் வலுவான நில நடுக்கம் ஏற்பட்டது. நேற்று சனிக்கிழமை நேபாளத்தை தாக்கிய மோசமான நிலநடுக்கத்தில் சுமார் 2000 பேர் வரை பலியான பின்னணியில் இன்றும் அங்கே நிலநடுக்கம் தொடர்கிறது.
சனிக்கிழமை நேபாளத்தை தாக்கிய நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோசமானதொரு தொடர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இதனால் தலைநகர் காட்மண்டுவிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கட்டிடங்கள் மோசமாக அசைந்து, அல்லாடி, அதிர்ந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்சத்தில் பொதுமக்கள் கட்டிடங்களைவிட்டு வெளியேறி மைதானங்களை நோக்கி ஓடினர்.
நேபாளத்தில் மட்டுமல்லாமல், வட இந்தியா, வங்கதேசத்திலும் இன்றைய நிலநடுக்கம் உணரப்பட்டதோடு, எவெரெஸ்ட் பிராந்தியத்தில் புதிதாக பனிச்சரிவுகளையும் தோற்றுவித்திருக்கிறது.
அண்டைநாடுகளில் இருந்து நிவாரணப்பொருட்கள், மருத்துவர்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணியாளர்கள் பலரும் விமானங்கள் மூலம் நேபாளத்தில் வந்து இறங்கியபடி இருக்கிறார்கள்.
இந்தியா மற்றும் சீனாவின் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளுக்கான விமானங்களும் காத்மண்டுவிற்கு வந்து சேர்ந்துள்ளன.
அடுத்த சிலநாட்களுக்கு நேபாளத்தில் மோசமான காலநிலையும் தொடர் மழையும் நிலவும் என்பதால், அங்கே நடக்கும் தேடுதல் மற்றும் மீட்ப்புப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
நேபாளத்தில் இரண்டாவது நாளாக நிலநடுக்கம்
Reviewed by NEWMANNAR
on
April 26, 2015
Rating:

No comments:
Post a Comment