முறையற்ற நியமனங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்யும் கால எல்லை நீடிப்பு
கடந்த காலங்களில் வடமாகாணத்தில் இடம்பெற்ற முறையற்ற நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்வதற்கான கால எல்லை மேலும்
நீடிக்கப்பட்டுள்ளதாக மாகாணசபை பிரதி அவைத்தலைவர் ம.அன்டனி ஜெயநாதன் தெரிவித்துள்ளார்.
மாகாணசபையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வடமாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறையற்ற நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு குறித்து விசாரிக்க வடமாகாண சபையினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டு உள்ளது
7 பேர் கொண்ட விசாரணை குழுவின் தலைவராக பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதனும், பா,கஜதீபன், ஆ.பரம்சோதி க.சர்வேஸ் வரன் த.லிங்கநாதன், விந்தன் கனகரட்னம், அ.அஸ்மின் ஆகியோர் அக்கு ழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இக் குழுவினர் வடமாகாண சபை பேரவை செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தனர். அதன் போதே அக்குழுவின் தலைவரும் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவருமான அன்ரனி ஜெகநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
1.1.2010ம் ஆண்டு முதல் 15.3 20 15 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வடமாகாணத்தில் இடம்பெற்ற முறையற்ற நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு குறித்து பாதிக்கப்பட்டவர்கள் எமக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு முதலமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிப்போம்.
பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாட்டை 15.04.2015 காலப்பகுதிக்குள் அனுப்பி வைக்க கோரி இருந்தோம். அதன் படி பல முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த கால எல்லையை நீடிக்க சொல்லி எமது குழுவிடம் பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 30.04.2015ம் ஆண்டு வரையில் நீடித்து உள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை முறைப்பாடு
செய்யாது இருந்தால் இந்த கால எல்லைக்குள் எமக்கு முறைப்பாட்டை செய்யலாம். இதனை மூன்று மாத காலப்பகுதிக்குள் விசாரணை செய்து நாங்கள் முதலமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
வடமாகாண பொதுச்சேவைகள் மற்றும் உள்ளூராட்சிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்தே நாங்கள் ஆராய்வோம். இதில் சில முறைப்பாடுகள் மத்திய அமைச்சு சார்ந்த முறைப்பாடுகளும் கிடைக்க பெற்றுள்ளன அவை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்போம்.
இன்றைய தினம் வரையில் முறையற்ற நியமனம் குறித்த முறைப்பாடுகள் 59 கிடைக்க பெற்றுள்ளன. முறையற்ற பதவி உயர்வு குறித்த முறைப்பாடு 18 கிடைத்துள்ளன. முறையற்ற இடமாற்றம் குறித்த முறைபாடுகள் 9 கிடைத்துள்ளன.
எங்களுக்கு அனுப்பபடும் முறைப்பாடுகள் குறித்து இரகசியம் பேணப்படும் எனவே பயமின்றி பாதிக்கபபட்டவர்கள் எமக்கு முறைப்பாடு செய்யலாம்
இந்த விசாரணை குழு நம்பகமானதும் நேர்மையானதுமான குழுவாகும். பக்க சார்பின்றி கிடைக்கின்ற முறைப்பாடுகளை பொறுப்புடன் பரிசீலனை செய்து இந்த அறிக்கையை முதலமைச்சருக்கு அனுப்பி வைப்போம் என மேலும் தெரிவித்தார்.
முறையற்ற நியமனங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்யும் கால எல்லை நீடிப்பு
Reviewed by NEWMANNAR
on
April 20, 2015
Rating:

No comments:
Post a Comment