வவுனியாவில் 11 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் கைது
வவுனியாவில் 11 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை நேற்று கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் சஞ்சய் என்ற 11 வயது சிறுவன் பகல் வேளையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
கொலை இடம்பெற்றவேளை சிறுவன் மாத்திரமே வீட்டில் தனியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை நடாத்தி வந்தனர்.
இந்தநிலையில் இக் கொலையுடன் தொடர்புடையவர் என கொல்லப்பட்ட சிறுவனின் உறவினரான 18 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த இளைஞர் சிறுவனின் வீட்டின் அருகிலேயே வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் வீட்டில் இருந்த உண்டியலில் பணத்தை திருடச் சென்றவேளை குறித்த இளைஞன் இந்தக் கொலையைச் செய்துள்ளார்.
தான் திருடியதைக் கண்ட சிறுவன் வீட்டாரிடம் சொல்லப் போவதாக கூறியதையடுத்து, அருகில் இருந்த கத்தியை எடுத்து சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக இளைஞன் பொலிஸாரிட் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.
வவுனியாவில் 11 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் கைது
Reviewed by NEWMANNAR
on
May 05, 2015
Rating:

No comments:
Post a Comment