அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கூட்டுறவுப் பணியாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படி அதிகரிப்பு: பொ.ஐங்கரநேசன் உறுதி


வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுப் பணியாளர்களுக்கு ஜுன் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் வாழ்க்கைச் செலவுப்படி 1950 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இது தொடர்பாக குறிப்பிடுகையில்,

கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் 2012 ஆம் ஆண்டுச் சுற்று நிரூபத்தின் பிரகாரம் கூட்டுறவுப் பணியாளர்களுக்கு இப்போது வரைக்கும் வாழ்க்கைச் செலவுப்படியாக மாதந்தோறும் 5850 ரூபா வழங்கப்பட்டு வருகிறது.

அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டுறவுப் பணியாளர்கள் தங்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படி நீண்ட காலமாக அதிகரிக்கப்படாமல் இருப்பதாகத் தொடர்ந்தும் முறையிட்டு வருகிறார்கள்.

பணியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு, கூட்டுறவுத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் எனது அங்கீகாரத்துடன் வாழ்க்கைச் செலவுப்படியை அதிகரிப்பதென்று தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம், கிராமிய வங்கிகளில் இருந்து பெறப்படும் இலாபத்தினைத் தவிர்த்து சுயமுயற்சியால் இலாபம் ஈட்டுகின்ற சங்கங்கள் யாவும் பணியாளர்களுக்கான வாழ்க்கைச் செலவுப்படியாக 7800 ரூபாவை ஜுன் முதலாம் திகதி முதல் வழங்கவேண்டும் எனத் தெரிவித்ததோடு, இந்த அதிகரிப்பானது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுப் பணியாளர்களுக்கு அண்மையில் 30 வீதம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு வடக்கு கூட்டுறவு அமைச்சால் மே 15ஆம் திகதி முதல் 100 நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வடக்கு கூட்டுறவுப் பணியாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படி அதிகரிப்பு: பொ.ஐங்கரநேசன் உறுதி Reviewed by NEWMANNAR on May 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.