புது வாழ்வின் விழாவாகவும், மறு வாழ்வின் விழாவாகவும் இந்த உயிர்ப்பு விழா அமைய வேண்டும்-மன்னார் மறைமாவட்ட ஆயர்
இந்த உலகம் எமக்குச் சொந்தமானது அல்ல. ஆகவேதான் ஆண்டவருடைய உடைகளை அவர்கள் உரிகின்ற பொழுது, எங்களுக்கு ஆண்டவர் தருகின்ற செய்தி என்னவென்றால், இந்த உலகம் உரிய பட வேண்டியது. ஆகவே இந்த உலகத்தை நாங்கள் வெல்லுகின்ற பொழுதுதான் உயிர்ப்பின் முழுமையான மகிமையில் நாங்கள் பங்கேற்கின்றோம்.என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள உயிர்ப்பு பெருவிழா செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
உயிர்ப்பு ஞாயிறு என்பது வெறுமனே உயிர்ப்பின் மகிழ்வில் நாங்கள் திளைப்பது மட்டுமல்ல. நாங்கள் கடந்து வந்த 40 நாட்களையும் திரும்பிப் பார்த்து, நம்பிக்கையோடு எம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்கின்ற ஒரு நிகழ்வாக இருக்கிறது.
இந்த 40 நாட்களும் நாங்கள் இயேசுவோடு இணைந்து இருந்தோம். இந்த வாழ்வை, சிலுவை வாழ்வை நாங்கள் இன்னும் சிறப்பாக வாழ்வதற்கு நம்பிக்கையூட்டுகின்ற ஒரு நாளே உயிர்ப்பு நாளாக இருக்கின்றது.
இந்த உயிர்ப்பு நாள் எம்முடைய வாழ்விலே எங்களுக்கு வருகின்ற சிலுவைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும், ஆண்டவருடைய சிலுவையில் வாழ்வு பெறவும் எங்களை இந்த உயிர்ப்பு அழைத்து நிற்கின்றது. கல்லறையால் கடவுளை அடக்க முடியாது. கல்லறை கல் கூட தடம் புரண்டோடுகின்றது.
ஆகவே, எம்முடைய இந்த நாட்களிலே நாங்கள் சந்திக்கின்ற அனைத்து நிகழ்வுகளிலும் ஆண்டவருடைய உயிர்ப்பின் நம்பிக்கையில் நாங்கள் வாழ அழைக்கப்படுகின்றோம்.
இந்த உலகம் எமக்குச் சொந்தமானது அல்ல. ஆகவேதான், ஆண்டவருடைய உடைகளை அவர்கள் உரிகின்ற பொழுது, எங்களுக்கு ஆண்டவர் தருகின்ற செய்தி என்னவென்றால், இந்த உலகம் உரியப்பட வேண்டியது. ஆகவே, இந்த உலகத்தை நாங்கள் வெல்லுகின்ற பொழுதுதான் உயிர்ப்பின் முழுமையான மகிமையில் நாங்கள் பங்கேற்கின்றோம்.
ஆண்டவரை சிலுவையில் அறைந்தார்கள். அந்தச் சிலுவையிலே அறையப்பட்ட காட்சி, இந்த உயிர்ப்பின் மாட்சியில் எங்களுக்கு எந்த நேரமும் எம் கண் முன்னே நிற்க வேண்டிய ஒரு காட்சியாக இருக்கின்றது. அந்தச் சிலுவையிலே ஆண்டவரை அறைகின்ற பொழுது, ஆணிகள் கொண்டு அறைந்தார்கள். அந்த ஆணிகள் இந்த உலகத்திலே நாங்கள் பார்க்கின்ற பிசாசை நினைவூட்டுகின்றது.
இந்த ஆணிகள் தசையூடாக அந்தச் சிலுவையிலே அறைய படுகின்ற பொழுது, இந்தத் தசை எங்களுடைய மனித இச்சையை சுட்டி நிற்கின்றது.
இவை இரண்டையும் சேர்த்து சிலுவையில் அறைகின்ற பொழுது, சிலுவை மீட்பின் சின்னமாக மாறுகின்றது. இதை நாங்கள் வாழ்வாக்குவதே இந்த உயிர்ப்பு விழாவின் உன்னதமான அழைப்பாக இருக்கிறது. ஆகவே, இந்த உலகத்தை வென்று, நாங்கள் ஆண்டவரோடு இறந்து, உயிர்த்து, அந்த உயிர்ப்பின் மகிமையில் தொடர்ந்து இந்த உலகத்தில் நாங்கள் ஆண்டவரோடு வாழ இந்த உயிர்ப்பு விழா எங்களுக்கு வழிகோலட்டும்.
ஆகவே, இந்த உயிர்ப்பு விழா ஒரு புது வாழ்வின் விழாவாக, மறு வாழ்வின் விழாவாக இந்த உயிர்ப்பு விழா அமைய உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த உயிர்ப்பு விழா நாளிலே நல்வாழ்த்துக்களை உங்களுக்குக் கூறி நிற்பதிலே நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
மன்னார் மறைமாவட்டம் சார்பாகவும், அனைத்து கத்தோலிக்க மக்கள் சார்பாகவும் எல்லோருக்கும் நீதியோடும், அன்போடும், சமாதானத்தோடும், சமத்துவத்தோடும் கூடிய ஒரு வாழ்வை இந்த உயிர்ப்பு விழா இந்த வருடத்தில் எங்களுக்குத் தர வேண்டும் என்று மனதார உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்தி நிற்கின்றேன்-
Reviewed by Vijithan
on
April 04, 2026
Rating:


No comments:
Post a Comment