சிங்கள அரசியலாளர்களால் அழிந்தும் அழியாத புலிகள்
காலத்திற்கு காலம் மாறி செல்லும் அரசியல் சூழலுக்கு மத்தியில் அரசியல் நடத்துவதென்பது பெரும் பிரயத்தனங்களை கடந்தாக வேண்டிய நிலையை உருவாக்குகின்றது.
தேர்தல் காலங்களில் ஒருவரையொருவர் சாடுவதும் செயற்பாடுகளை குறைகளாகவே வெளிப்படுத்துவதும் அரசியல் மேடைகளில் ஒன்றும் புதிய விடயமாகி விடவில்லை. இலங்கை அரசியலை பொறுத்தவரை குறைப்படும் கருத்தின்றி அரசியல் இல்லை என்ற அளவிற்கு வியாபித்துள்ளது என்பதே உண்மை.

இதன் தொடர்ச்சி முடிவடைந்து விட்டதாக யுத்த முடிவுக்கு பின்னர் எண்ணிய போதிலும் தேர்தல்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அமர்வுகள் நெருங்கும் போதெல்லாம் மீண்டும் புலி அரசியல் தலைதூக்கி வந்திருந்தது.
தமிழர்கள் என்றாலே புலிகள் என்று பார்த்த சிங்கள தலைமைகள் சில இந்த எண்ணப்பாட்டில் இருந்து இதுவரை விடுதலை பெறாதது முயலுக்கு மூன்றுகால் என்பதற்கு ஒப்பதானதாகவே கொள்ளவேண்டும்.
சிங்கள மக்களிடம் அரசியல் நடத்த புலி தேவைப்படும் அரசியல் தலைமைகள் இன்றும் ஊசலாடிக்கொண்டிருப்பது புலிகளுக்கு பெருமை சேர்ப்பதாகவே எண்ணத் தோன்றுவதுடன் புலிகள் இன்றி சிங்கள தலைமைகள் அரசியல் செய்யமுடியாதோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
அண்மையில் மஹிந்த ராஜபக்ச புலிகள் மீண்டும் தலைதூக்க விடாது இருப்பதற்கு தான் பிரதம வேட்பாளராக களமிறங்க உள்ளதாக அறிவித்தல் விடுத்துள்ளார்.
இதே ராஜபக்ச 2009ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டார்கள் என்றும் தான் சிங்கள மக்களை மீட்க வந்த மீட்பராகவும் காட்டி அடுத்த தேர்தலில் வெற்றியை தனதாக்கியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் தேர்தல் காலத்தில் கோபி, அப்பன், தேவிகன் என்ற புதிய புலிகள் உருவாக்கம் பற்றிய கதைகள் உருவாக்கப்பட்டு வவுனியா, வெடிவைத்தகல் பகுதியில் வெடி வைத்து கொல்லப்பட்டதாக தகவல் பரப்பப்பட்டிருந்தது.
எனினும் அங்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு எவருடைய சடலத்தையும் காட்டுவதற்கோ அல்லது பதவியா வழியாக அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட அம் மூவரது சடலங்களோ காட்டப்படவில்லை.
பாரிய தேடுதல்கள் மற்றும் களமுனை போன்ற கட்டமைப்புடன் மேற்கொள்ளப்பட்ட அம் மூவரின் மரணம் புதிய புலிகள் உருவாக்கத்தை கட்டுப்படுத்தியதாக சிங்கள மக்களிடம் வாக்கு வங்கியை தளராது வைத்திருக்க உதவியிருந்தது என்பதற்கு அப்பால் ஏன் அச் சடலங்களை காட்ட முடியாமல் போனது என்ற கேள்வி இன்றும் எழச்செய்கின்றது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி கதிரையை இழந்து நிற்கும் மஹிந்த ராஜபக்சவுக்கும் சிங்கள இனவாத அரசியலாளர்களுக்கும் மீண்டும் புலிகள் தேவைப்படுகின்றது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாக தெரிவித்தார்.
அத்துடன் புலிகளின் பெயரையோ தமிழர்களை முன்னிலைப்படுத்தாமலோ சிங்கள அரசியலாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்று காட்டட்டும் என்ற சவாலையும் விடுத்திருந்தார்.
எனவே, இவ்வாறான புலி பூச்சாண்டி காட்டும் அரசியல் களம் இன்றும் தென்பகுதியில் மாறாதுள்ளது.
அத்துடன் புதிய அரசு புலிகளை மீள் உருவாக்க முனைவதாகவும் சாத்தியமற்ற குற்றச்சாட்டுக்களை அடுக்கி செல்கின்றனர்.
அவ்வறாயின் 2009ம் ஆண்டுடன் புலிகள் ஒழிந்து விட்டார்கள் என்ற கருத்தில் இன்றும் சிங்கள தலைமைகளுக்கு பாரிய சந்தேகம் உள்ளமை வெளிப்படையாகி விடுகின்றது.
இந் நிலையிலேயே தற்போது புலம்பெயர் அமைப்புக்களுடனான கலந்துரையாடல்கள் புதிய அரசுக்கு சிங்கள இனவாத அமைப்புகளிடமிருந்தும் மஹிந்த ராஜபக்ச சார்பு அரசியலாளர்களிடமிருந்தும் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர் அமைப்புகளுடன் லண்டனில் இடம்பெற்ற சந்திப்பு வெறுமனே இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதாகவோ எதிர்வரும் அரசியல் செயற்பாடுகளை மையப்படுத்தியதாவோ இருந்திருக்கவில்லை.
இது தமிழர்களுடைய நீண்டகாலப் பிரச்சினைக்கு எதிர்வரும் காலங்களில் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும், மக்களின் உடனடித் தேவைகள், விடுவிக்கப்பட வேண்டிய காணிகள், விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடுகள் அமைத்துக் கொடுத்தல், அதற்கான வளங்களை எப்படி பெறுதல், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழர்களின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்தும் கட்சி பிரதிநிதியொருவர் நம்பிக்கையுள்ளதாக தெரிவிக்கும் புதிய அரசுடன் மனம் திறந்து புலம்பெயர் அமைப்புகள் மத்தியில் நடத்திய கலந்துரையாடலாகவே உள்ளது.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர புலம்பெயர் அமைப்புகள் அனைத்தும் புலிகள் அல்ல என்றும் அவர்கள் பற்றிய புகழ் பாடுதல்களும் தென் இலங்கையில் சில சலசலப்பை ஏற்படுத்த காரணமாகியிருக்கின்றது என்பதற்கு அப்பால் இவ்விடயம் புலிகளை மீண்டும் உருவாக்குவதான தொனிப்பொருளில் பாராளுமன்றம் வரை சென்று விவாதத்திற்குள்ளாகியிருக்கின்றது.
இந்நிலையில் தமிழர்களுக்கான நியாயப்பாடுகளை பேசவும் அதற்கான தீர்வைப் பெறவும் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி களம் அமைப்பது என்பது தென் இலங்கை இனவாத அரசியலாளர்களுக்கு பெரும் சங்கடமாகவே உள்ளது.
இவ்வாறான நிலையில் கடந்து, வரப் போகும் நாட்களிலும் இவ்வாறான இனவாத அரசியலாளர்களும் மஹிந்த ராஜபக்ச சார்பு ஆதரவாளாகளும் புலிப்பூச்சாண்டியை வைத்தே அரசியல் செய்ய துணிந்துள்ளதுடன் தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதென்பதை எட்டாக்கனியாகவே வைத்துள்ளமை வெளிப்படையாகியுள்ளது.
இந்நிலையில் தமிழர்கள் என்றால் புலிகள் என்றும், புலம்பெயர் அமைப்புகள் என்றால் புலி முகவர்கள் என்றும் காலங்காலமாக சொல்லப்படும் கருத்தியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டியதும், அதனை பொய்யாக்க வேண்டியதும் தமிழ் தலைமைகளிடம் உள்ள பாரிய விடயப் பரப்பாகும் என்பது மறுப்பதற்கில்லை.
கபில்
சிங்கள அரசியலாளர்களால் அழிந்தும் அழியாத புலிகள்
Reviewed by Author
on
June 19, 2015
Rating:

No comments:
Post a Comment