தமிழ் கைதிகளின் விடுதலைக்காக விசேட பிரார்த்தனைகளை நடத்துமாறு இந்து மாமன்றம் கோரிக்கை
சுமார் 217 தமிழ் கைதிகள் பல வருடங்களாக சிறைவைக்கப்பட்டுள்ளமை நீதிக்குப் புறம்பானது என கைதிகளின் உறவினர்கள் பலர் மீண்டும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
இதனை அகில இலங்கை இந்து மாமன்றம் அறிக்கை ஒன்றினூடாக வெளியிட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்னர் தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்படாவிடின் அவர்கள் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடரக்கூடும் என இந்து மாமன்றம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் கைதிகளின் விடயத்தை விரைவில் நிவர்த்தி செய்ய ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போருக்கு இறையருள் வேண்டி வௌ்ளிக்கிழமை (30) விசேட பிராத்தனைகளைச் செய்யுமாறும் இந்து மாமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கைதிகளுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டு அவர்கள் உண்ணாவிரதத்தை மீண்டும் ஆரம்பித்தால், இந்த நாட்டு இந்து மக்களும் அதற்கு ஆதரவு வழங்கும் நிர்பந்தம் ஏற்படும் எனவும் தீபாவளியைக் கொண்டாடும் நிலையில் நாட்டு மக்கள் இருக்க மாட்டார்கள் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசு எந்தவித கொண்டாட்டமோ களியாட்ட நிகழ்வோ ஏற்பாடு செய்தால் சுய கௌரவமுடைய எந்த இந்து மகனும் கலந்துகொள்ள மாட்டான் எனவும் அகில இலங்கை இந்து மாமன்றம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமிழ் கைதிகளின் விடுதலைக்காக நாளை கோவில்களில் இடம்பெறும் பூஜைகளின் போது விசேட பிரார்த்தனைகளை முன்னெடுக்குமாறு அனைத்து கோவில்களின் நிர்வாக சபையினரிடமும் இந்து மாமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ் கைதிகளின் விடுதலைக்காக விசேட பிரார்த்தனைகளை நடத்துமாறு இந்து மாமன்றம் கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
October 30, 2015
Rating:

No comments:
Post a Comment