வடமராட்சி கிழக்கில் நாளை கண்டனப் பேரணி!
யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேசத்தில், கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வீதிகளை புனரமைத்து தருமாறு கோரியும் நாளை வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு கண்டனப் பேரணி ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியம் மற்றும் கடற்றொழிலாளர்கள் அமைப்புகள், வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பு என்பன ஒன்றிணைந்து இந்த கண்டனப் பேரணியை மேற்கொள்ளவுள்ளன.
வடக்கு மாகாண சபையால் அனுமதியளிக்கப்பட்டுள்ள கடல்நீரை நன்னீராக்கும் இத்திட்டத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து வடக்கு மாகாண சபை அமைச்சர் உட்பட அதிகாரிகள் பலருக்கு எடுத்துக் கூறியும் அவர்கள் அதனை கருத்தில் எடுக்காது கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கான ஆய்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்
எனவே தமது பிரதான வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதனை கவனத்தில் எடுக்காது மேற்கொள்ளும் இந்த திட்டத்தை தாம் எதிர்ப்பதாகவும், அத்தோடு வடமராட்சியில் உள்ள பல வீதிகள் நீண்ட காலமாக எவ்வித புனரமைப்பும் இன்றி மிக மோசமாக காணப்படுவதனால் அதனையும் புனரமைத்து தருமாறும் கோரியும் கண்டனப் பேரணி இடம்பெறவுள்ளது.
இந்தக் கண்டனப் பேரணியானது மருதங்கேணி சந்தியிலிருந்தும், தாழையடி கடற்கரையிலிருந்தும் இரு அணிகளாக ஆரம்பித்து மருதங்கேணி உதவி அரச அதிபர் அலுவலகத்தை அடைந்து அங்கு உதவி அரச அதிபரிடம் மகஜர்களும் கையளிக்கப்படவுள்ளன.
வடமராட்சி கிழக்கில் நாளை கண்டனப் பேரணி!
Reviewed by Author
on
February 25, 2016
Rating:

No comments:
Post a Comment