14 வயது பாலகி தாயாகிய பாலியல் வல்லுறவு வழக்கு! தண்டனையா அல்லது கருணையா? இன்று இளஞ்செழியன் தீர்ப்பு!
பாடசாலை மாணவியாகிய 14 வயது பாலகியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று திங்கட்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி இந்த வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ நேரம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு வயது 14 வருடம் 4 மாதம். எதிரியாகிய முதியவருக்கு 63 வயது. இந்த வன்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவிக்குப் பெண் குழநதை ஒன்று பிறந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளின் பின்னர் முதியவர், மாணவி, மாணவிக்குப் பிறந்த குழந்தை ஆகிய மூவரினதும் இரத்தத்தில் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மரபணு பரிசோதனை நடத்திய ஜீன் டெக் விஞ்ஞான ஆய்வுகூடத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி குடா லியனகே நந்திக்க சிறியந்த பெரேரா தமது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து மன்றில் சாட்சியமளித்தார்.
“யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் பாதிக்கப்பட்ட மாணவியை வைத்திய பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
பாடசாலை மாணவியாகிய 16 வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளையைக் கடத்தி பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட எதிரியாகிய வயோதிபரும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
இந்த வழக்கு விசாரணைகள் முடிவுக்கு வந்ததையடுத்து எதிரி தரப்பு சட்டத்தரணி மற்றும் அரச தரப்பு சட்டத்தரணி ஆகியோர் தமது தொகுப்புரைகளை நிகழ்த்தினர்.
எதிரி தரப்பு சட்டத்தரணி, தனது தொகுப்புரையில் குற்றச் செயல் நடைபெற்ற சமயம் 2009ம் ஆண்டு எதிரிக்கு 63 வயது தற்சமயம் அவருக்கு 69 என்பதை சிறப்பாகச் சுட்டிக்காட்டியதுடன், கவனத்திற் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த மன்று எதிரியைக் குற்றவாளியாகக் காணுமேயானால், அவருடைய 69 வயது என்ற வயோதிப நிலையை கருணை உள்ளத்துடன் கவனத்தில் எடுத்து, நட்டயீடு சம்பந்தமான தீர்ப்பு வழங்குவதற்குப் பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதி இளஞ்செழியனிடம் விண்ணப்பித்தார்.
இதனையடுத்து அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி தனது தொகுப்புரையில், எதிரியாகிய வயோதிபரின் வன்புணர்வுச் செயற்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட 14 வயது மாணவி தாயாராகி, கைக்குழந்தையுடன் நீதிமன்றத்தில் நிற்கின்றார்.
எனவே, குழந்தை பெற்றுள்ள குழந்தையாகிய அந்தப் பாலகிக்கும், அவருடைய கைக்குழந்தைக்கும் இந்த மன்று நீதி வழங்க வேண்டும்.
பாலியல் குற்றம் புரிந்தவர் வயோதிப வயதுடையவர் என்பதற்காக, அவர் சார்பிலான கருணை மனுவை மன்று ஏற்கக் கூடாது. சமூகத்தில் பாலியல் வல்லுறவு குற்றங்சகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் 14 வயது பாலகி. அத்துடன் பாடசாலை மாணவி. பதினான்கு வயது குழந்தைக்கு கையில் ஒரு குழந்தையை ஏந்தும் நிலையை எற்படுத்திய எதிரிக்கு கருணை இரக்கம் எதுவும் மன்று காட்டக்கூடாது. சட்டப் புத்தகத்தில் உள்ள அதியுச்ச தண்டனை அவருக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொகுப்புரைகளையடுத்து 14 ஆம் திகதி திங்களன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.
எதிரி தரப்பு சட்டத்தரணியின் கருணை விண்ணப்பம் முன்னிலை பெறுமா அரச சட்டவாதியின் கருணையே காட்டக்கூடாது சிறுமிக்கு நீதியே வேண்டும் என்ற வாதம் முன்னிலை பெறுமா என்பது இன்று திங்கட்கிழமை தீர்ப்பில் தெரிந்துவிடும்.
14 வயது பாலகி தாயாகிய பாலியல் வல்லுறவு வழக்கு! தண்டனையா அல்லது கருணையா? இன்று இளஞ்செழியன் தீர்ப்பு!
Reviewed by Author
on
March 14, 2016
Rating:

No comments:
Post a Comment