68 ஆயிரம் வீடுகளை தரைமட்டமாக்குவோம்.....
கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 68ஆயிரம் சட்டவிரோத வீடுகள் 900 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்ற புள்ளிவிபரம் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் 90 வீதமானவை அரசாங்க நிலங்கள் எனவும் மேல்மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
எனவே, மே மாதத்தின் முன்னர் கொழும்பு நகர எல்லைக்குள் உட்பட்ட அநாவசிய வீடுகள் அனைத்துமே தரைமட்டமாக்கப்படும்.அதேபோல் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அநாவசிய சட்டவிரோத வீடுகளை அமைப்பவர்களுக்கும், வீதிகளை மறைத்து நிலங்களை அபகரிப்பவர்களுக்கும் எந்த சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது. வீடுகளும் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேல்மாகாண நகர அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பு நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் கடந்த 2012ஆம் ஆண்டு மதிப்பீடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போது கொழும்பு நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் 68ஆயிரம் சட்டவிரோத வீடுகள் அல்லது முறையற்ற வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்ற புள்ளிவிபரம் அரசாங்கத்திற்கு கிடைக்கபெற்றது. எனினும் எனது ஆய்வுகளின் படி 56ஆயிரம் வீடுகள் இவ்வாறு சட்டவிரோதமான வகையில் உள்ளன என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் சரியான புள்ளிவிபர எண்ணிக்கை எமக்கு கிடைக்கபெறவில்லை. ஆனால் இந்த தொகையில் சட்டவிரோத குடியிருப்புகள் இருக்கும் என மதிப்பிட முடியும்.
இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தோட்டங்கள் என்ற பெயரில் தமது குடியிருப்புகளை அமைத்துள்ளனர். இது சராசரியாக 900 ஏக்கர் பரப்பை கொண்டுள்ளது. இந்த பகுதியில் 90 வீதமான நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலமாகும். அதேபோல் தனியார் உறுதிகளைக் கொண்ட நிலமும் சிறிதளவு உள்ளது. ஆனால் இது பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்கள் அல்ல. அதேபோல் இவ்வாறு இருக்கும் மக்களுக்கு பிரத்தியேக வீடுகளைஅமைத்து அவர்களை குடியமர்த்தும் நடவைக்கைகளை அரசாங்கம் கடந்த காலத்தில் இருந்தே முன்னெடுத்து வந்துள்ளது.
குறிப்பாக 18 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரையிலான வீடுகளை புனரமைத்து இந்த மக்களுக்கு கொடுக்கும் திட்டத்தையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதில் ஆரம்பகட்டமாக 5 ஆயிரம் வீடுகளை பொதுமக்களுக்கு ஏற்கனவே கையளித்துள்ளோம். ஏனைய பொதுமக்களுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக வீடுகளை கையளிக்கும் துரித நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்காக 60 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளது.
ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் அப்பாவி மக்களின் நிலங்களை அரசாங்கம் சூறையாடியுள்ளது என கூற முடியாது. இதில் 90 வீதமான அரச நிலங்களை பொதுமக்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த மக்கள் எவரும் அப்பாவிகள் இல்லை.இது திட்டமிட்ட ஆக்கிரமிப்பு மட்டுமேயாகும். சிலர் அப்பாவிகளாக உள்ளனர். ஆனால் மேலும் பலர் இதை வியாபாரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் மே 15ஆம் திகதி இந்த மக்களுக்கு வீடுகளை கையளிக்கும் ஆரம்பகட்ட வேலைத்திட்டம் ஆரம்பமாகின்றது. இதில் வழங்கப்படும் வீடுகளுக்கு அந்த மக்கள் செல்ல முடியும். அதேபோல் மே மாதத்தின் முன்னர் அநாவசிய வீடுகள் அனைத்துமே தரைமட்டமாக்கப்படும். இப்போதே நாம் அதையும் தெரிவிக்கின்றோம். பின்னர் அராங்கம் அநாவசியமாக பொதுமக்களின் வீடுகளை உடைத்து மக்களை வீதியில் இறக்குவதாக குற்றம் சுமத்துவதை ஊடகங்கள் நம்பிவிடக் கூடாது.
அதேபோல் இந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அநாவசிய சட்டவிரோத வீடுகளை அமைப்பவர்களுக்கும், வீதிகளை மறைத்து நிலங்களை அபகரிப்பவர்களுக்கும் எந்த சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது. வீடுகளும் வழங்கப்பட மாட்டாது. சட்டத்திற்கு அமையவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.
68 ஆயிரம் வீடுகளை தரைமட்டமாக்குவோம்.....
Reviewed by Author
on
March 02, 2016
Rating:

No comments:
Post a Comment