நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்-Photos
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக தொண்டு அடிப்படையில் பணியாற்றி நியமனம் கிடைக்கப்பெறாத தொண்டர்கள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களை சந்தித்து வடமாகாண முதலமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட ஜவருக்கான மகஜர்களை கையளித்து தமக்கான நீதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்
குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக பணியாற்றிவரும் அரசால் தவறவிடப்பட்ட ஏனைய சுகாதார தொண்டர்கள் அனைவருக்கும் ஒரே தடவையில் நிரந்தர நியமனம் வழங்க வழி செய்யுங்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார தொண்டர்களாக யுத்த இடப்பெயர்வுக்கு முன்னரிருந்து இன்று வரை முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவின் கீழ் பணிபுரிந்து வருகிறோம்.
நாம் சுகாதார தொண்டர்களாக சுனாமி அனர்த்த காலத்திலும் யுத்தத்திற்கு பின்னரும், வவுனியா நலன்புரி நிலையங்களிலும் அதன் பின்னர், மீள்குடியேற்றத்தின் பின்னர், இன்று வரை தொடர்ச்சியாக மிக வறுமையிலும், போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியிலும் எந்தவித கொடுப்பனவுமின்றி நிரந்தர நியமனம் வரும் என்ற நம்பிக்கையயில் இந்த சுகாதார தொண்டர் சேவையாற்றி வருகிறோம்.
எம்மோடு பணிசெய்த ஒரு தொகுதி தொண்டர்களுக்கு 08.06.2013 அன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. இன்னுமொரு தொகுதியினருக்கு 23.03.2015 அன்று நியமனம் வழங்கப்பட்டது.
இந்த தொண்டர்களோடு தம்மை ஒப்பிடும்போது 75ற்கு மேற்ப்பட்டவர்களே தவறவிடப்பட்ட ஏனைய சுகாதார தொண்டர்கள். இவர்கள் விடயத்தில் எந்தவித வேறுபாடுகளோ, தகைமை பிரச்சினைகளோ, தொடர் சேவைப்பிரச்சினை எதுவுமே இல்லை.
கடந்த காலத்தில் மகிந்த அரசாங்கத்தில் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் செய்யப்பட்டு எமக்கு பொருளாதார வாழ்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் விரக்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டமே யுத்தத்திலும், இயற்கை அனர்த்தத்திலும் 100 வீதம் முழுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டம்.
வறிய மக்கள் பொருளாதாரம், கல்வி அடிப்படைத்தேவைகள் அனைத்திலும் மிக மிக பின்தங்கிய மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டமே முதன்மையானது என தாங்கள் அறிந்ததே.
எனவே, முல்லைத்தீவு மாவட்டத்தில் நீங்கள் கவனமெடுத்து 05 வருடத்திலிருந்து 15 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சுகாதார தொண்டர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து 03ம் கட்டமாக அனைவருக்கும் எவ்வித தாமதமமுமின்றி தீர்வை பெற்றுத்தருமாறு கோருகின்றோம் என அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்-Photos
Reviewed by NEWMANNAR
on
March 09, 2016
Rating:
No comments:
Post a Comment