விண்வெளியில் நடந்த ஏழு அதிசயங்கள்....

பாத்திரத்தில் நீர் கொதிப்பது
பூமியில் ஒரு கண்ணாடி குடுவையில் பாதியளவுக்கு நீரை எடுத்துக்கொண்டு சூடாக்கினால், கொதிநிலைக்குரிய வெப்பத்தை எட்டியதும் எக்கச்சக்கமான நீர்க்குமிழ்கள் நீரின் மேற்பரப்பில் தோன்றும் கூடவே நீர் ஆவியாகவும் செய்யும்.
ஆனால் ஈர்ப்பு குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் நீரை பாத்திரத்தில் சூடேற்றினால், அதுபோல நிகழ்வதில்லை. மாறாக ஒரே ஒரு பெரிய நீர்க்குமிழ் உருவாகிறது. அது அவ்வளவு எளிதில் உடையாமல் அளவு அதிகரித்து பாத்திரத்துக்குள் நீரின் மேற்பரப்பில் தோன்றுகிறது.
இதற்கு காரணம் திரவ இயக்கவியல் விதிப்படி, கொதிநீரில் ஏற்படும் வெப்பச்சலனம் மற்றும் மிதப்பு தன்மையில் ஈர்ப்புவிசை வேறுபாட்டின் தாக்கமே.
மேலும் அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள செய்தியில், விண்வெளியில் நீரை கொதிக்க வைக்கும் ஆய்விலிருந்து குளிர்விப்பதற்கான அமைப்பையும் பெறமுடியும்.
விண்வெளியில் சூரிய ஒளியிலிருந்து வெப்பத்தை பெற்று நீரை கொதிக்க வைக்கவும் அந்த ஆவியிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் ஒரு Power Plant அமைக்க வேண்டும் என கூறியுள்ளது.
மெழுகுவர்த்தி தீபம்

பூமியில் மெழுகுவர்த்தியில் தீபம் ஏற்றினால், மேல்நோக்கி ஒரு சுடர் நீள்வடிவத்தில் எரியும் காற்றில் அது அசையும் இதுவே பூமியில் காணும் அனுபவம்.
ஆனால் விண்வெளியில் ஏற்றினால் அந்த சுடர் எரியும் பொருளைவிட்டு மேலே சென்று ஒரு வட்டவடிவத்தில் எரிகிறது.
இதற்கு காரணம் அங்கு ஈர்ப்புவிசை இல்லாததால் எரியும் காற்று மூலக்கூறுகள் கீழ் நோக்கி ஈர்க்கப்படாமல். எல்லா திசைகளிலும் சம அளவில் விரிவடைவதால் மேல் சென்று வட்ட வடிவில் தெரிகிறது.
பக்டீரியா வளர்ச்சி

பொருள்கள் மீது பக்டீரியாக்கள் பூமியில் வளர்வது போல விண்வெளியிலும் பக்டீரியாக்கள் வளரவே செய்கின்றன.
ஆனால் பூமியில் பக்டீரியாக்கள் வளர்வதைவிட மூன்று மடங்கு அதிகமாக வளர்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பீர் பாட்டிலில் நுரைவழிதல்

பீர் பாட்டில் மற்றும் கார்பனேட் உள்ள குளிர்பானங்கள் மூடியை திறந்ததும் பொங்கி நுரையோடு வழிவது பூமியில் இயல்பு. அது அந்த திரவத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறும் செயலாகும்.
ஆனால் விண்வெளியில் இந்த பாட்டில்கள் திறக்கப்படும்போது, அப்படி நுரைத்து பொங்கி வழிவதில்லை. அதற்கும் அங்குள்ள ஈர்ப்புவிசை வேறுபாடுதான் காரணம்.
அதனால் அதை அருந்துகிற விண்வெளி வீரர்களுக்கு வயிற்றில் பிரச்சினையை ஏற்படுத்திவிடுகிறது. அதிர்ஷ்டவசமாக அவுஸ்திரேலியாவில் கார்பனேசன் இல்லாத பீர் தயாரிக்கிறார்கள். விண்வெளி வீரர்கள் அதையே பயன்படுத்துகின்றனர்.
பூக்களின் வாசம்

ரோஜாப்பூவின் வாசம் எவ்வளவு சிறப்பானது என்பது தெரியும். ஆனால், பூமியில் அதன் வாசத்திற்கும் விண்வெளியில் வீசுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
பூக்களில் மணத்திற்கு காரணம், அதன் அரோமெடிக் திரவம் காற்றில் பரவுவதுதான். இது வெப்பம், ஈரப்பதம், பூக்களின் வயது, ஈர்ப்புவிசை இவற்றை பொறுத்தும் மாறும். அதனால் விண்வெளியில் அதன் வாசனையில் மாற்றம் ஏற்படுகிறது.
வியர்வை உடலில் தங்காது

உடலில் வெப்பம் உயர்வது பூமியில் இயல்புதான். உடல் வியர்வையை வெளிப்படுத்தி தன்னை சரிசெய்துகொள்ளும். அந்த வியர்வை உடலோடு ஒட்டியிருக்கும் ஒரு அசவுகரியத்தை தரும்.
ஆனால் விண்வெளிப் பயணத்தில், உடல் அடிக்கடி குளிர்ச்சியடைவதும் அதை ஆவி ஸ்ப்ரேயால் உஷ்ணப்படுத்திக்கொள்வதும் தேவைப்படுகிறது. ஆனால், வியர்வை உடலில் படியாமல் கரைவதால் உடை மாற்றிக்கொள்ளும் உணர்வு வருவதில்லை.
அதற்கு, காரணம் அங்குள்ள ஈரப்பதம், வெப்பநிலை, ஈர்ப்புவிசை மாறுபாடுதான்.
கண் பார்வை பிரச்சினைகள்
விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு ஈர்ப்பு விசை பூஜியமாக உள்ள இடங்களில் கண்பார்வை கோளாறுகள் ஏற்படுகின்றன. நம் உடல் பூமியின் ஈர்ப்புவிசையோடு சேர்ந்து இயங்கும் இயல்புடையது.
விண்வெளியில் ஈர்ப்புவிசை இல்லாமல் உடலில் உள்ள ரத்தம் மற்றும் திரவங்கள் முழுதும் உடலின் மேற்பகுதியில் அதிக அளவில் பாய்வதால், கண்கள் மற்றும் தலைப்பகுதியில் உள்ள நரம்புகள் விரிவடைந்து கண் மற்றும் முகம் எல்லாம் வீக்கம் அடைகின்றன. இதனால், பார்வை குறைபாடுகளும் ஏற்படுகிறது.
ஈர்ப்புவிசை தாக்கம் பூமி மீது உள்ள எல்லா பொருள்களிலும் உண்டு. ஆனாலும், ஈர்ப்புவிசையை கழித்துவிட்டு, எடைமுதல் எல்லாவற்றையும் அந்த பொருளுடைய தன்மையாகவே நாம் கருதுகிறோம்.
விண்வெளி போல ஈர்ப்புவிசை இல்லாத இடத்துக்கு செல்லும்போதுதான் பூமியில் உள்ள ஈர்ப்புவிசையின் பங்களிப்பை உண்மையாக உணர்கிறோம்.
விண்வெளியில் நடந்த ஏழு அதிசயங்கள்....
Reviewed by Author
on
March 13, 2016
Rating:

No comments:
Post a Comment