அண்மைய செய்திகள்

recent
-

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி இணைந்தது.


தமிழக அரசியலில் மிக முக்கியமான காலகட்டம் இது.வரும் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு எந்தக் கட்சி யார் தலைமையில் உள்ள கூட்டணியில் இணையும் என்பது கடந்த ஒரு மாதமாக பெரும் பரபரப்புடன் கூடிய விவாதத்தை உண்டாக்கி வந்தது. அதிலும் விஜயகாந்த் எந்தக் கூட்டணிக்குச் செல்வார் என்று ஊடகங்களைக் காட்டிலும் திமுக தலைவர் கருணாநிதி அவ்வப்போது புதிய கணிப்புகளைக் கூறிவந்தார்.ஆனால் இறுதி வரை தேமுதிக அவர் பக்கம் சேராமலே மக்கள் நலக் கூட்டணி பக்கம் இணைந்துவிட்டார். கடைசியில் பழம் பாலில் விழாமல் தேனில் விழுந்துவிட்டதாக ஆர்ப்பரிக்கிறார்கள் மக்கள் நலக் கூட்டணியினர். இது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக,திமுக அணிகள் உண்மையிலேயே இந்தத் தேர்தலில் அதிர்ச்சி அடைந்துதான் இருக்கின்றன. முதன் முதலாக தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள்,மதிமுக ,விடுதலைச் சிறுத்தைகள்,தேமுதிக ஆகியவை ஆண்ட மற்றும் ஆளும் கட்சியான திமுக,அதிமுகவை எதிர்த்து ஒரு புதிய களத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.இது தமிழகத்தைப் பொறுத்த வரை மிகப் பெரிய சாதனைதான்.இதுவே அதிமுக,திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் இளைய தலைமுறை வாக்களர்களுக்கு நல்ல செய்தி என்று சமூக இணைய தளங்களில் வரவேற்கப்பட்டு வருகிறது.

இந்தக் கூட்டணி அமைய வைகோ, ஜி.ராமகிருஷ்ணன்,முத்தரசன்,திருமாவளவன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வீண் போகவில்லை. அதே நேரத்தில் இடையில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும்,சிலரால் ஏற்படுத்தப் பட்டிருந்தாலும் அதையெல்லாம் மக்கள் நலக் கூட்டணி பொருட் படுத்தாமல் திமுக,அதிமுக கட்சிகளுக்கு மாற்று அணி உருவாக்குவதில் வெற்றி கண்டு இருக்கிறார்கள் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இத்தோடு மட்டும் நில்லாமல், வாக்காளர்களிடம் நம்பிக்கையை உருவாக்கும் வகையிலான மாற்று பிரசாரம், பூத் கமிட்டிகளை ஏஜெண்டுகளை அமைப்பதில் தீவிரம்,ஓட்டுக்கு பணம் கொடுப்பதைக் கண்காணிக்கும் குழுக்கள் அமைப்பது என்று பல்வேறு அதிரடிகளை மக்கள் நலக் கூட்டணி மற்றும் தேமுதிக கையாள உள்ளது.இது தேர்தல் வெற்றியை நோக்கிய பயணம் என்பதை அறிந்து திமுக,அதிமுக கிலியில் உள்ளன.

இப்போதைக்கு தேமுதிக 124 தொகுதிகளில் போட்டி இடுவது என்றும்,மக்கள் நலக் கூட்டணி 110 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் இந்த அணியில் ஜி.கே.வாசன்,ஐ.ஜே.கே., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறும் நிலையில்,மக்கள் நலக் கூட்டணி தங்களின் தொகுதிக் கணக்குகளை மாற்றிக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வாரத்தைகள் இன்னமும் நடந்து கொண்டுதான் உள்ளன.

தமிழகம் முழுவதும் ஒரு கோடி இளைய தலைமுறை வாக்களர்களை இணைக்கும் பணியில் தீவிர மாகியுள்ள மக்கள் நலக் கூட்டணி வெற்றியை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துள்ளது என்பதை உணர்ந்த தேமுதிக நிறைந்த முழு நிலவு நாளான இன்று தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.ஆனால்,பாஜக தான் தற்போது தனித்து நிற்கும் நிலையில் இருக்கிறது. சில சமுதாய அமைப்புகள் மட்டும் அவர்களுக்கு ஆதரவை அளித்துள்ளது.இன்னும் பல அதிரடி திருப்பங்களை தமிழக அரசியல் காண உள்ளது.

மொத்தத்தில் விஜயகாந்த்- மக்கள் நலக் கூட்டணி இணைவு என்பது ஊழல் விரும்பாத மனங்களுக்கு நல்ல செய்திதான்.

விகடன் 
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி இணைந்தது. Reviewed by NEWMANNAR on March 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.