அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் செய்தி இணையதளங்களை பதிவு செய்யக் கோருவது ஏன்?


இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31-ம் திகதிக்கு முன்னதாக ஊடக அமைச்சில் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ஊடக தர்மங்களுக்கும், தராதரங்களுக்கும் உட்பட்ட வகையில் செய்தி இணையதளங்கள் தடையின்றி இயங்குவதற்கு இந்த பதிவு அவசியம் என்று நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்துகொள்ளாத இணையதளங்கள் உரிய திகதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31-ம் திகதிக்கு பின்னர், பதிவு செய்யப்படாத இணையதளங்கள் சட்டத்துக்கு முரணானவையாக கருதப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

இவ்வாறான அறிவித்த முந்தைய அரசாங்கக் காலத்திலும் விடுக்கப்பட்டதாகவும் சில இணையதளங்கள் அப்போதைய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதாகவும் இலங்கையிலிருந்து இயங்கும் தமிழ்மிரர் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் ஆசிரியர் ஏ.பி. மதன் பிபிசியிடம் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தினால் சில இணையதளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை புதிய அரசாங்கம் தளர்த்தியதாகவும், ஆனால் இப்போது ஊடக நெறிமுறைகளுக்கு புறம்பாக பல இணையதளங்கள் இயங்குவதாக அரசாங்கம் கருதுவதாகவும் அவர் கூறினார்.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் சில இணையதளங்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுவருகின்ற நிலையில், இவ்வாறான அறிவித்தல் அரசாங்கத்திடமிருந்து வந்திருப்பதையும் மதன் சுட்டிக்காட்டினார்.

இணையதளங்களை பதிவு செய்வதன் மூலம், அவற்றில் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் அவற்றுக்கு பொறுப்பானவர்களை கேள்விக்குட்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ரீதியில் இந்த அறிவித்தலை அரசாங்கம் விடுத்திருப்பதாகவும் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஏ.பி. மதன் தமிழோசையிடம் கூறினார்.

இணையங்களை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை

ஊடகங்களைக் கட்டுபடுத்தும் நோக்கில் செய்தி ஊடகங்களை பதிவுசெய்யுமாறு கோரவில்லை. இணைய ஊடகவியலாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் நோக்கிலேயே செய்தி இணையங்களைப் பதிவுசெய்யுமாறு அரசாங்கம் கோரியிருப்பதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்தார்.

ஊடக அமைச்சில் பதிவு செய்யப்படும் செய்தி இணையத்தளங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்ளுக்கு அமைச்சின் ஊடக அடையாள அட்டை வழங்கமுடியும். எனவே, அவர்களும் இடையூறு இன்றி செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இணையத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வழங்கி வருகின்றன என்றும் தெரிவித்தார்.

செய்தி இணையத்தளங்களைப் பதிவுசெய்யுமாறு ஊடகத்துறை அமைச்சு பத்திரிகைகளில் விளம்பரங்களைப் பிரசுரித்திருந்தது. இது தொடர்பில் கேட்டபோதே ஊடகத்துறை பதில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது செய்தி இணையத்தளங்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. செய்தி இணையங்கள் பொறுப்பு வாய்ந்தவையாக செயற்படுவதுடன், உரிய அங்கீகாரத்துடன் செயற்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். அமைச்சின் கீழ் பதிவுசெய்வதன் ஊடாக பொறுப்பு வாய்ந்த ஊடகங்களாக அவை மாற்றமடையும் என்றும் தெரிவித்தார்.

செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்வதற்காக விசேடமான சட்டங்கள் எதுவும் இல்லையென்று சுட்டிக்காட்டிய அவர், இணையத்தளங்களைப் பதிவுசெய்யும் செயற்பாடு 2012ம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவு. இந்த நடைமுறையைத் தொடர்ந்தும் பின்பற்றுவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அவர் கூறினார்.

இலங்கையில் செய்தி இணையதளங்களை பதிவு செய்யக் கோருவது ஏன்? Reviewed by Author on March 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.