இளம்பெண்ணின் கணக்கில் தவறுதலாக ரூ.48 கோடியை அனுப்பிய வங்கி....
அவுஸ்திரேலிய நாட்டில் இளம்பெண் ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.48 கோடியுடன் நாட்டை விட்டு தப்பிக்க இளம்பெண் முயற்சித்தபோது பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மலேசியா நாட்டை சேர்ந்த Christine Jiaxin Lee(21) என்ற இளம்பெண் அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறார்.
இந்த இளம்பெண்ணிற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள Westpac என்ற தனியார் வங்கியில் வைப்பு நிதிக் கணக்கு உள்ளது.
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் இந்த இளம்பெண்ணின் வங்கி கணக்கில் 2.3 மில்லியன் பவுண்ட்(48,49,72,944 இலங்கை ரூபாய்) திடீரென அனுப்பட்டது.
ஆனால், இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது? யார் இதை அனுப்பியது? என்பதை பற்றி சிறிதும் எண்ணாமல் அந்த பெண் பணத்தை எடுத்து தாராளமாக செலவு செய்து வந்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், இதே வங்கியில் பணம் இருந்தால் ஆபத்து என திட்டம் போட்ட அந்த பெண் ஒவ்வொரு வாரமும் 33,000 டொலர் வரை மற்ற வங்கிகளில் உள்ள தன்னுடை கணக்குகளுக்கு அனுப்பி வந்துள்ளார்.
இதுபோன்ற ஒரு சூழலில், வங்கியில் இருந்து தவறுதலாக பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ.48 கோடிக்கும் அதிகமாக சென்றுள்ளதை அறிந்த வங்கி நிர்வாகிகள் உடனடியாக பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர்.
ஆனால், சுதாரித்துக்கொண்ட அந்த இளம்பெண் உடனடியாக தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு சிட்னி விமான நிலையத்திற்கு சென்று மலேசியாவிற்கு தப்பிவிடலாம் என திட்டமிட்டுள்ளார்.
பெண்ணின் திட்டம் தோல்வியடைய பொலிசார் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்தனர்.
உடனடியாக பொலிசார் நடத்திய சோதனையில் இளம்பெண்ணின் வீட்டில் பல வண்ணங்களில் விலை உயர்ந்த கைப்பைகளை அவர் வாங்கி மலை போல் குவித்து வைத்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், விதவிதமான உடுப்புகளையும் வாங்கி குவித்து வைத்துள்ளார். வேறு வழியின்றி பொலிசார் பெண்ணிடம் எஞ்சி இருந்த தொகையை மீட்டு வங்கியிடம் செலுத்தியுள்ளனர்.
ஆனால், ரூ. 35,50,03,159 வரை அந்த பெண் செலவு செய்திருப்பதாகவும், அல்லது வேறு வங்கிகள் அந்த பணத்தை மாற்றியுள்ளதாக தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, ‘வங்கியில் இருந்து தனக்கு சொந்தமில்லாத பணத்தை எடுத்து செலவு செய்த குற்றத்திற்காக நேரடியாக பெண் மீது குற்றம் சுமத்த முடியாது.
எனினும், பணத்தை எடுத்து செலவு செய்வதற்கு முன்னதாக, அவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்பது குறித்து பெண் வங்கியிடம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும்’ என நீதிபதி கூறியுள்ளார்.
இளம்பெண்ணின் காதலன் 1,000 டொலர் நீதிமன்றத்தில் பிணையாக செலுத்தியுள்ளதால், தற்போது பெண் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இளம்பெண்ணின் கணக்கில் தவறுதலாக ரூ.48 கோடியை அனுப்பிய வங்கி....
Reviewed by Author
on
May 10, 2016
Rating:

No comments:
Post a Comment