மாணவர்களை கல்வியில் மேம்பட்டவர்களாக மாற்ற வேண்டிய தார்மீகக் கடமை அனைவருக்கும் உண்டு: வடமாகாண முதலமைச்சர்
யாழ்.கல்வி வலயத்தினால் இன்று யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நடத்தப்பட்ட ஆசிரியர் மாநாடு – 2016 இல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, சீ.வி.விக்னேஸ்வரன் உரையாற்றியுள்ளார்.
தொடர்ந்தும் அவருடைய உரையில்,
இந்த ஆசிரியர் மாநாட்டின் முதலாம் நாள் நிகழ்வுகளை தலைமையேற்று நடாத்திக் கொண்டிருக்கின்ற யாழ்ப்பாணம் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.தெய்வேந்திரராஜா, பேருரை ஆற்றுவதற்காக வருகைத் தந்திருக்கின்ற பேராசிரியர் மா.சின்னத்தம்பி, மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகளே, மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கின்ற ஆசிரிய ஆசிரியைகளே, சகோதர சகோதரிகளே! என்று ஆரம்பித்து தனது உரையை ஆரம்பித்தார்.
“நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இன்று தான் எனக்கு ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இயற்கை என்பது எமக்குக் கிடைக்காதவற்றைக் கிடைக்கச் செய்யத்தான் நோய் நொடிகளைக் கொண்டுவருகின்றதோ நானறியேன். ஓய்வு என்பதை பெறாதிருந்தேன், மறந்திருந்தேன். கட்டாயமாக ஓய்வில் ஆழ்த்திவிட்டது இயற்கை. ஆனால் மரத்தின் இலை விழுந்தாலும் அதற்கு அரசியல் காரணம் கற்பிக்கும் மனிதன் என் நோய்க்கும் ஒரு நொட்டை சொல்லிக் கொண்டு அரசியல் காரணங்களைக் கற்பித்து வந்தமை வேடிக்கையாக இருந்தது. எனினும் வாண்மை விருத்திக்கு வித்திடும் ஒரு நிகழ்வில் என் போதாமைக்குப் பின்னர் கலந்து கொள்வதில் மனம் திருப்தியடைகின்றேன்.
மத்திய கல்வி அமைச்சின் வாண்மைவிருத்தி திட்டத்தின் ஓரங்கமாக இலங்கையின் 98 வலயங்களிலும் உள்ள ஆசிரியர்களுக்கு வாண்மைவிருத்தியை ஏற்படுத்த ஆசிரியர் மாநாடுகளை நடாத்துவதற்கு அரசினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் ஆசிரியர்களுக்கான மாநாடு இன்றும் நாளையும் நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு முதலாம் நாள் நிகழ்வாகிய இன்று உங்கள் பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கு முன்னராக உங்கள் முன் உரையாற்றுவதையிட்டு மனமகிழ்வடைகின்றேன்.
ஆசிரியர்களின் வாண்மைவிருத்தி என்பது தற்போதைய புதிய கல்வி நடவடிக்கைகளுக்கு மிகவும் அத்தியவசியமானதொன்றாக கருதப்படுகின்ற இத்தருணத்தில் இது போன்ற மகாநாடுகளை நடாத்த வேண்டியது அவசியமே. கல்விப் புலத்தில் மிகவும் மேம்பட்ட நிலையில் விளங்கிய யாழ்ப்பாணம் இப்போது அதன் தரம் கேள்விக்குறியாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் மீண்டும் எம் மாணவ மாணவியரை கல்வியில் மேம்பட்டவர்களாக மாற்ற வேண்டிய தார்மீகக் கடமை எம் அனைவருக்கும் விசேடமாக ஆசிரியர்களுக்கு உண்டு என்பதை மனதில் இருத்தி எமது கடமைகளை முன்னெடுத்துச் செல்லல் அவசியமாகும்.
கற்றவர்களும் சமயப்பற்றுடையவர்களும் கலை ஆர்வம் கொண்டவர்களும் கடமை வீரர்களும் விளைந்த இப் பூமியில் இன்று கல்விக்கு பஞ்சம், சமயத்துக்குப் பஞ்சம், கலையில் வஞ்சம், கடமையில் வஞ்சம், சுயநலத்தில் தஞ்சம் அடைந்துள்ளோம். எமது இளைய சமுதாயம் தான்தோன்றித்தனமாக நினைத்த நினைத்த மாத்திரத்தில் மிகப் பாரிய குற்றச் செயல்களில், பாலியல் சேட்டைகளில் ஈடுபடுகின்றார்கள். மிகப் புகழ் பூத்த பாடசாலைகளில் கல்வி கற்கின்ற திறமை மிக்க பல மாணவர்கள் கூட இன்று பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதை நாம் பத்திரிகைகள் வாயிலாகவும் நேரடியாகவும் அறிந்தும் கேள்விப்பட்ட வண்ணமும் உள்ளோம். நல்ல குடும்பங்களில் பிறந்த மாணவ மாணவியர் கூட இவ்வாறான பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு மூல காரணம் என்ன என்றகேள்வி எம்முன் பூதாகாரமாக எழுந்து நிற்கின்றது.
படித்த பண்பாடான குடும்பங்களில் பிறந்த மாணவ மாணவியரே இவ்வாறான குற்றச்செயல்களில் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர் என்று கூறக் கேட்கின்றோம். கல்லூரி மாணவியர்களுக்கு குற்றச் செயல்களுடன் தொடர்புண்டு என்கின்றது சில செய்திகள். காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்கையில், இந்த அவசர உலகத்தில் பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கப்பெறாத பல மாணவச் செல்வங்களே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது ஒரு பொதுவான கருத்தாக காணப்படுகின்றது.
தமது பிள்ளைகளுக்கு உணவு, உடை, புத்தகம் ஆகிய அனைத்தையும் பெற்றோர்கள் வாங்கிக் கொடுக்கின்றனர். விடியற்காலையில் அவசர அவசரமாக காலை உணவைத் தயாரித்து பிள்ளைகளை பாடசாலைக்குத் தயாராக்கி அவர்களின் பாடசாலைப் பேருந்துகளிலோ அல்லது முச்சக்கர வண்டியிலோ ஏற்றி அனுப்பி விட்டு தாய் தந்தையர் இருவரும் தமது அலுவலகங்களை நோக்கி உண்டது பாதி உண்ணாதது மீதி என நேரத்திற்குச் செல்ல வேண்டுமே என்ற துடிப்பில் ஓடிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அப்பிள்ளைகளுக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற அன்பு அரவணைப்பு போன்ற தேவைகளை வழங்க மறந்துவிடுகின்றார்கள் அல்லது ஏதோ காரணங்களால் மறுத்து விடுகின்றார்கள் பெற்றோர்கள். மீண்டும் மாலை 5 மணிக்கு வீடு திரும்பியதும் பகல் முழுவதும் உழைத்துக் களைத்து உடல் சோர்வுற்ற நிலையில் அவர்களுக்கும் ஒரு ஆறுதல் தேவைப்படுகின்றது. பின்னர் இரவு உணவு தயாரிப்பதிலும் மற்றும் வீட்டு வேலைகளிலும் மிகுதி நேரம் சரியாகப் போய்விடுகின்றது.
இதற்குள் தொலைக் காட்சிப் பெட்டிகளில் வருகின்ற நாடகங்கள் இன்னோர் இடைஞ்சல். இன்று குடும்பங்களுக்கு இடையில் இந்த நாடகங்கள் மிகப் பாரிய தாக்கங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவுதான் வேலை இருந்தாலும், பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தாலும் அதைப்பற்றி எதுவித கவலையுமின்றி குறிப்பிட்ட நேரத்தில் நாடகங்களைப் பார்ப்பதற்கு அம்மாக்கள் தவறுவதில்லை. சில தருணங்களில் வளர்ந்த பிள்ளைகளைத் தம்முடன் சேர்ந்து பார்க்க அழைக்கவுந் தவறுவதில்லை இந்த அம்மாக்கள்.
பிள்ளைகள் பெற்றோரின் அன்புக்காக ஏங்குகின்றனர். அவர்களின் அரவணைப்பில் சற்று நேரம் இருக்க ஆசைப்படுகின்றனர். ஆனால் பெற்றோர்களுக்கோ அதற்கு நேரம் இல்லை. கேட்டால் பிள்ளைகளின் எதிர்கால சூபீட்சத்திற்காகவே நாம் ஓடி ஓடி உழைக்கின்றோம். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிக்க எமக்கும் விருப்பம் தான். ஆனால் அவர்களுடன் கூடிய நேரத்தைச் செலவழித்தால் நாம் வேலையை இழக்க வேண்டி ஏற்படும் எனக் கூறுகின்றார்கள். இதில் சில உண்மைகள் இருக்கக் கூடும். ஆனால் முன்னுரிமை அடிப்படையில் நோக்குவோமாயின் பிள்ளைகளின் உடல் உள விருத்தியே முதன்மை பெறுவதையும் ஏனையவை இரண்டாம் படியாகவுமே காணப்படுகின்றன. சில பெற்றோர்கள் தமக்கு பிள்ளைகள் கிடைத்தவுடன் கணவன் மனைவி இருவரும் கூடிப்பேசித் தீர்மானித்து வருமான அடிப்படையில் யார் வேலை செய்வது சிறந்தது, யார் வேலையை விட்டு வீட்டில் இருந்து பிள்ளைகளைக் கவனிப்பது எனத் தீர்மானித்து முடிவுகளை மேற்கொள்கின்றார்கள். அவ்வாறான குடும்பங்களில் பிள்ளைகளின் வளர்ப்பு சீராக அமைகின்றது.
அன்பான ஆசிரிய ஆசிரியைகளே! மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் உங்களிடமும் ஒரு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. உங்கள் பாடசாலைக்கு அல்லது கல்லூரிக்கு தினமும் கற்க வரும் மாணவ மாணவியர் அன்புத்தேடலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றார்கள் என்ற விடயத்தை மனதில் இருத்தி அவர்களை அன்புடன் அரவணைத்து, விசேடமாக ஆரம்ப வகுப்பு பிள்ளைகளை உங்கள் பிள்ளைகள் போன்று அரவணைத்து, அவர்களுக்குத் தேவையான கல்வியைப் புகட்டுகின்ற போது அப்பிள்ளைகள் உங்கள் மீது அளவு கடந்த மதிப்பும் பாசமும் உடையவர்களாகவும் விருப்புடன் கல்வி பயில்பவர்களாகவும் காணப்படுவர்.
இதற்கு பல உதாரணங்கள் எமது கண்முன் காணக்கூடியதாக உள்ளன. சில மாணவ மாணவியர்,குறிப்பாக ஆரம்பப் பாடசாலை மாணவ மாணவியர் சிலர், பாடசாலை செல்வதற்கு மிகவும் விருப்புடையவர்களாக, ஒரு நாள் தன்னிலும் விடுமுறையில் நிற்காது தினமும் பாடசாலைக்கு செல்ல விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். அப்படியான மாணவ மாணவியர் கல்வி கற்கின்ற வகுப்பில் ஆசிரிய ஆசிரியைகளை அவதானித்தால் அவர்கள் பிள்ளைகள் மீது அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் கொண்டவர்களாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும். அத்துடன் அவர்கள் சிறுபிள்ளைகளுக்கான பாடங்களை விளையாட்டுடன் நகைச்சுவையுடன் சேர்த்துப் புகட்டி விடுகின்றார்கள். சின்னஞ்சிறு சிசுக்களும் விளையாடி விளையாடியே நகைத்து நகைத்தே விரும்பிக் கற்கின்றனர்.
இன்னொருசாரார் பாடசாலைக்கு செல்லவே விருப்பின்றி தினமும் அழுது அடம்பிடித்து தாய் தந்தையரின் கண்டிப்பின் பெயரிலேயே பாடசாலைக்கு செல்வார்கள். இவர்கள் கற்கின்ற வகுப்பில் உள்ள ஆசிரிய ஆசிரியைகளைப் பற்றி நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. "சட்டம்பி பொல்லானாம் சற்றும் இரங்கானாம்" என்ற கதையாகிவிடும். இப்போது கட்டைப்பிரம்பெடுத்து தண்டனை வழங்குவதற்கு ஆசிரிய ஆசிரியைகளுக்கு உரிமையில்லை. மாணவ மாணவியரும் பெற்றோர்களும் உடனடியாவே நீதிமன்றத்திற்கு சென்றுவிடுகின்றார்கள். அமெரிக்காவில் அண்மையில் 6 வயது பையன் ஒருவன் ஆசிரியர் கட்டைப் பிரெம்பெடுக்க “Mr. you be careful. I will have you punished by theCourts” என்றானாம்!
மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களை ஆசிரியர்கள் தண்டிக்க முடியாதபடி வலுவான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மாணவ மாணவியரை முறைத்துப் பார்த்தாலே வழக்குத்தாக்கல் செய்யக் கூடிய சட்டங்களுக்கு மத்தியில் மாணவ மாணவியரின் நலன்கள் ஒருபுறம் பாதுகாக்கப்படுகின்ற போதும் இன்னொரு புறத்தில் சில வேளைகளில் அவை தீமையாகவும் அமைந்துவிடுகின்றன.
தண்டனைகளால் மட்டும் மாணவ மாணவியரைத் திருத்திவிடலாம் என்ற கருத்து பிழையானது என்றே எண்ணுகின்றேன். பிள்ளைகளைத் தண்டிப்பதை விட அவர்கள் மீது அன்பு செலுத்துவதன் மூலம் அவர்களின் உள்ளங்களை வென்று நடப்பதன் மூலம் கல்வியின்பால் அவர்கள் கூடிய சிரத்தை எடுக்க வைக்க முடியும்.
1971ஆம் ஆண்டு முதன் முதலில் சட்டக் கல்லூரிக்குள் ஒரு விரிவுரையாளராக வகுப்பறைக்குள் சென்றேன். அப்போது எனக்கு வயது வகுப்பு மாணவ மாணவியரிலும் பார்க்க ஒரு 5 அல்லது 6 வருடங்கள்தான் கூட என்று கூறலாம். மாணவ மாணவியர் சேர்ந்து பெருத்த கூக்குரல் இட்டு சிரித்து வகுப்பை நடத்த விடாமல் செய்தார்கள். உடனே நான் “மாணவ மாணவியரே! ஒரு ஆறு ஏழு வருடங்களுக்கு முன் நானும் நீங்கள் இருக்கும் இருக்கைகளில் இருந்து நீங்கள் செய்யும் நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டேன். இன்று நான் இங்கிருக்கின்றேன். 20 நிமிடங்களுக்கு என்னைப் படிப்பிக்க விடுங்கள். அதன் பின் நானே வந்து உங்களுடன் சேர்ந்து வகுப்பைக் குழப்பி அடிப்போம்!” என்றேன். எல்லோரும் சிரித்துவிட்டு அடங்கிவிட்டார்கள். 20 அல்லது 30 நிமிடங்களுக்கு எந்த வித ஓசையும் இன்றி என் விரிவுரையில் ஈடுபட்டிருந்தார்கள். அதன் பின் நான் அவர்களிடையே சென்று ஒவ்வொருவருடன் பேசி அளவளாவிக் கொண்டேன். இன்றும் அவர்கள் என் நண்பர்களே! என் உள்ளத்தில் அவர்கள் மீது அன்பு இருந்ததால்தான் இது முடிந்தது என்று நினைக்கின்றேன். அவர்களை என் எதிரிகள் என்று நான் நினைத்திருந்தால் வகுப்பு வேறுவிதாக மாறியிருந்திருக்கும். மாணவ மாணவியர்க்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் இடையில் பரஸ்பரம், நம்பிக்கை வளரவேண்டும்.
உங்கள் அழைப்பிதழில் அச்சிடப்பட்ட ஆசிரியர் கீதத்தை படித்துப் பார்த்தேன்.
“முத்து முத்தான சித்திரங்கள் இலங்கை
முற்றத்தில் சிந்திய இரத்தினங்கள்
பற்றும் பாசமும் வைத்தவற்றை நல்ல பாதையில்
சேர்க்கும் பணி எமதே”
என முத்தான வரிகளில் பொன் ஸ்ரீவாமதேவன், ஆசிரியர், மாணவ மாணவியர் மீது காட்ட வேண்டிய அன்பை ஆசிரியர் கீதத்தில் அழகாக எடுத்துக் கூறியிருக்கின்றார். புறக்கண் பார்வை அவர்க்கில்லை என்று கேள்விப்பட்டேன். கண் பார்வை இழந்த நிலையிலும் அவரின் அகச் சிந்தனைகள் எவ்வாறு உயர்ச்சி பெற்றிருக்கின்றது என்பதற்கு இந்த ஆசிரியர் கீதம் ஒரு எடுத்துக்காட்டு திரு. வாமதேவன் அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்பான ஆசிரிய ஆசிரியைகளே! எமது எதிர்காலச் சந்ததியை மாணவ சமுதாயத்தை, ஒரு கற்ற, பண்பட்ட சமூகமாக மாற்றவேண்டிய பாரிய பொறுப்பு உங்கள் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாம் சிறு பிள்ளைகளாக இருந்த காலத்தில் எமக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் அவர்களின் சாந்த குணம், அழகிய தோற்றம்,யார்க்கும் அஞ்சா நெஞ்சுரம், பார்த்தவுடனேயே கையெடுத்து கும்பிடவேண்டும் போன்றதொரு தோற்றம் எமக்கு மனத்திரையில் வருவன. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வருடம் 365 நாட்களும் வெள்ளை வெளேரென்ற வே~;டி, ந~னல் அணிந்த வண்ணம் அக்கால ஆசிரியர்கள் பவனி வருவார்கள். அதே போன்று பெண் ஆசிரியைகளும் சீரிய உடையில் பண்பட்ட இனிமையான பேச்சுடன் வலம் வந்தார்கள்.
இந்த நிலை எவ்வாறு மாற்றம் பெற்றது என்பது ஒரு கேள்விக்குறி தான். அக்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில்இரண்டு ஆண்டு காலப்பகுதிகளுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு ஒரு ஆசிரியருக்குரிய முழுமையான பயிற்சிகள் அனைத்தும் வழங்கப்பட்ட பின்னரேயே பாடசாலைகளில் கற்பிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் இன்று அவ்வாறு இல்லை. அண்மைக்காலம் வரையில் அரசியலானது ஆசிரியர்களை அரங்கேற்றி வந்தது. இப்பவும் அப்படியோ யானறியேன்.
இன்று அவர்கள் வேலையில் சேர்ந்தவுடனேயே நேரடியாகப் பாடசாலையில் கற்பிக்கத் தொடங்கிவிடுகின்றார்கள். சேவையின் போது வழங்கப்படுகின்ற பயிற்சிகள் மட்டுமே அவர்கள் பெறுகின்ற அனுகூலங்கள். அதனால் ஆசிரிய ஆசிரியைகள்இன்று தடுமாற்றத்தின் மத்தியிலேயே தம்தொழிலைச் செய்து வருகின்றார்கள் என்று அறிகின்றேன். இந்நிலை கட்டாயமாக மாற்றப்படவேண்டியதொன்று. எனினும் கல்வியியற் கல்லூரிகளில் இருந்து தெரிவு செய்யப்படுகின்ற ஆசிரிய ஆசிரியைகள் இதற்கு விதிவிலக்கானவர்கள் என்று எண்ணுகின்றேன்.
ஒளவைப்பிராட்டி கூட ஆசிரியர்களைக் கண்ட இடமெல்லாம் வாழ்த்து என குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள் அவ்வாறு விசேட மதிப்புக்குரியவர்கள், மரியாதைக்குரியவர்கள், ஒழுக்கசீலர்களாக இருக்க வேண்டியவர்கள். ஏனென்றால் ஆசிரியர்கள் என்றால் ஆசீர்வதிப்பவர்கள் என்று அர்த்தம். தன்னிலும் வயதில் குறைந்தவர்களுக்கு சதாகாலமும் ஆசீர்வதித்து சீரிய ஆலோசனைகளை வழங்குபவர் ஆசிரியர். அவர்களின் உரையாடல் கூட பண்பட்டதாக இருக்க வேண்டும். வன்சொற்கள் பயன்படுத்தும் தன்மையற்றவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
உத்தம தொழில்கள் மூன்று என்று உறோமர்கள் காலத்தில் அடையாளங் கண்டார்கள். ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகளே அவர்கள். காரணம் மூவரும் மக்கள் நலம் சார்ந்து மக்களுக்காக வேலை செய்பவர்கள் என்று அவ்வாறு அடையாளங் காணப்பட்டார்கள். இன்று மூவருமே மக்களுக்காக அல்லாமல் பணத்துக்காக வேலைசெய்பவர்களாக மாறி விட்டார்கள். இந்நிலை மாறவேண்டும். இதற்கான சட்டமூலங்களோ சட்டவரையறைகளோ எம்மிடம் இல்லாவிட்டாலும் நாமாகவே சில வரையறைகளை வகுத்துக் கொண்டு ஆசிரிய ஆசிரியைகளைப் பொறுத்த வரையில் “குரு” என்ற ஸ்தானத்தை தக்கவைத்துக்கொள்ள ஏற்ற முயற்சிகள் மேற்கொள்ளுதல் வேண்டும்.
மனதில் அன்பு இருப்பதுதான் இதற்கான சூட்சுமம். காலஞ்சென்ற அப்துல் கலாம் அவர்களை மனதிற்கு எடுங்கள். அவரை உலகம் மதித்தது. ஏன்? அவர் உள்ளத்தில் அன்பு நிரம்பி வழிந்தது. அதைச் சுற்றியுள்ளவர்கள் அவதானித்தார்கள். அவரின் அன்பிற்கு அடிமையாகி விட்டார்கள். அதுதான் இரகசியம். அத்துடன் கற்றல், கற்பித்தல் முறைகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மனமுவந்து எம்மக்கள் கற்கும் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இன்றைய கல்வி முறைகள் எல்லாம் பரீட்சைக்கு மாணவர்களை தயாராக்குவதாகவே அமைந்திருப்பதைக்காண்கின்றோம். 15 வருட வினாவிடை புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அதன் அடிப்படையிலேயே கற்றல் முன்னெடுக்கப்படுகின்றது. இது வெறும் ஏட்டுச்சுரைக்காயான கறிக்குதவாத கற்பித்தல் முறைமையாகும்.
நான் சட்டக் கல்லூரியில் இருந்த போது சட்ட மாணவமன்றத் தலைவனாக இருந்தேன். ஒரே வேலைப் பளு.பரீட்சைக் காலத்திலும் பலமான மன்ற வேலைகள். படிக்க நேரம் போதாது. இறுதியாண்டில் பத்துப் பாடங்களில் ஒன்பது பாடங்களுக்கு பரீட்சை எழுதியாகிவிட்டது. அடுத்தநாள் 10ஆவது பாடப்பரீட்சை. வகையற்றவர் சட்டம் அது. பணமின்றி நொடிந்து போனவர்கள் பற்றிய சட்டம் அது. உண்மையில் அதைப் படிக்கவே மறந்து விட்டேன். எனக்குத் தெரியும் முதல் 9 பாடங்களில் நான் சித்தியடைவேன் என்று. வங்குரொத்துச் சட்டம் சம்பந்தமாக எனக்கிருந்த அறிவு சூன்யமாக இருந்தது. கேள்வி – பதில் புத்தகங்கள் இருந்தன. 9வது பாடப் பரீட்சை முடிந்ததும் மத்தியான உணவு உட்கொண்டதும் படிக்க உட்கார்ந்ததுதான் தெரியும். அன்று இரவு சாப்பிட்டதும் படித்துக் கொண்டுதான். இரவு ஒரு கொஞ்சமும் நித்திரையில்லாமல் படித்து அடுத்த நாட்காலை நன்றாகப் பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு பரீட்சை எழுதி 58 புள்ளிகள் பெற்றேன். ஆனால் இன்றும் இவையெல்லாம் நினைவிருக்கின்றது. வகையற்றவர் சட்டம் பற்றிக் கேட்டால் எதுவுமே தெரியாது. அவ்வாறான கேள்வி – பதில் மாணவ – மாணவியர் தான் இன்று பரீட்சைகளில் சித்தி அடைகின்றார்கள். இதனால் பயன் ஏதும் இல்லை.
மனமுவந்து மாணவ மாணவியர் கல்வி பெற முன்வர வேண்டும். அதற்கு ஆசிரிய ஆசிரியைகள் உறுதுணையாய் இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்த்த ஆறுமுகநாவலர் தமது 18ஆவது வயதிலேயே அவரின் ஆசிரியர் பேர்சிவல் பாதிரியாரின் பணிப்பின் பெயரில் ஆங்கிலத்தில் காணப்பட்ட விவிலியம் என்னும் பைபிள் நூலை தமிழில் மொழி பெயர்ப்புசெய்தார். இந்த நூலை மொழிபெயர்ப்பு செய்வதற்குநாளொன்றுக்கு 6 மணித்தியாலங்கள் என்ற கணக்கில் 8 ஆண்டுகள் தொடர்ந்து மொழிபெயர்ப்பு செய்து பைபிளின் ஒரு முழுமையான மொழிபெயர்ப்பை உருவாக்கியிருந்தார். அதன் பின்னர் பலகல்விமான்கள் இதனை மொழிபெயர்ப்பு செய்த போதும் ஆறுமுகநாவலரின் மொழிபெயர்ப்பே சிறந்தது என உலகம் ஏற்றுக்கொண்டது. இவ்வாறு 18 வயதிலேயே ஆங்கிலப் புலமையையும் மொழிபெயர்ப்பாக்கம் செய்யும் திறமையையும் ஆறுமுகநாவலர் அவர்கள் பெற்றுக்கொண்டிருந்தார்.
ஆனால் இன்று எமது மாணவ மாணவியர், ஏன் அலுவலர்கள் கூட, தொடர்ந்தாற் போல் 2 பந்திகள் பிழையின்றி ஆங்கிலத்தை எழுதமுடியாத நிலையில் இருப்பது வருத்தத்தைத் தருகின்றது. மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற எமது மாணவ மாணவியர் தடங்கலின்றி, தடையின்றி, பயமின்றி நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் போய் வரலாம் என்பதை நாம் மறத்தலாகாது. எமது ஆசிரிய ஆசிரியைகளும் அவ்வாறே பாண்டித்தியம் பெற வேண்டும். இப்பொழுது அடுத்தவர் மொழி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிகின்றேன். அதனை நடைமுறைப்படுத்த நாங்கள் முன்வர வேண்டும். எங்கள் மொழியை மட்டும் நாம் தெரிந்திருந்தால் மற்றவர்கள் பற்றி எமக்கு வெறுப்பும் பிழையான கருத்துக்களுமே மிஞ்சும். ஆகவே எமது ஆசிரிய சமூகமும் மாணவ சமூகமும் மும்மொழித் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சியைப் பெற்று விட்டு எமக்கு ஆங்கிலம், சிங்களம் இரண்டுந் தெரியாது என்று வேண்டுமானால் அரசியல் காரணங்களுக்காகக் கூறுங்கள். சீனத் தலைவர்கள் நன்றாக ஆங்கில அறிவு பெற்றவர்கள். ஆனால் சீன மொழியிலேயே பேசுவார்கள்.
கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றமாகிய வலிந்துகற்றலை கைவிட்டமை போன்ற காரணங்களாலேயே பிறமொழிகளில் ஆர்வம் குன்றி அம்மொழிகளில் புலமையற்றவர்களாக எமது மாணவ மாணவியர் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இந்த இடைவெளி நிரப்பப்படவேண்டும். இப்போது எமது மாணவ மாணவியர் ஆங்கிலப் புலமை மிக்கவர்களாகவும், சிங்கள மொழித் தேர்ச்சி பெற்றவர்களாகவும் கண்டதையும் கற்கக்கூடிய ஆற்றலை உடையவர்களாகவும் வாசிப்புப் பழக்கத்தை கைக்கொள்பவர்களாகவும் மாற்றப்படவேண்டும்.
தெற்கில் சிங்கள மாணவ மாணவியர் தமிழ் படிக்கத் தொடங்கி விட்டார்கள். விரைவில் தமிழ் தெரிந்த சிங்கள அலுவலர்கள் இங்கு அனுப்பப்படுவார்கள். நாங்கள் தமிழில் மட்டும் பாண்டித்தியம் பெற்றிருந்தால் என்னாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த ஆசிரியர் மகாநாட்டில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்நூறு பேர் மகாநாட்டிலும் ஐந்நூறு ஆசிரியர்கள் கண்காட்சி பகுதியிலும் கலந்துகொள்ளவுள்ளார்கள் என்று அறிகின்றேன்.
கற்பித்தல் முறைமையில் செய்முறைப்பயிற்சியும் மிகவும் முக்கியமானதொன்றாகும். இன்று உயர்தர வகுப்புகளில் கற்கின்ற மாணவ மாணவியர்களில் கூடுதலானோர் செய்முறை பயிற்சியைக் குறைவாகப் பயின்றவர்களாகவே காணப்படுகின்றனர். முன்பு உயர்தர வகுப்புக்களில் தொடர்ச்சியாக மூன்று பாடவேளைகள் செய்முறை வகுப்புக்களாகக் காணப்பட்டன. இரசாயணம், பௌதீகம், உயிரியல் ஆகிய பாட கற்கை நெறிகளுக்கு செய்முறை வகுப்புக்களும் அதில் அவர்கள் ஈட்டிய பெறுபேறுகளும் தனியாக ஒரு செய்முறைப் பயிற்சிப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இது உயர்தர இறுதிப் பரீட்சைகளின் போது புள்ளியிடுவதற்கு பயன்படுத்தப்பட்டன.
இப்போது இந்த நிலை அற்றுப்போய் மாணவர்கள் குவிவு வில்லை, குழிவு வில்லை, குவிவு ஆடி, குழிவு ஆடி என்பவற்றுக்கிடையேயான வேறுபாடுகளையே முறையாக உணர முடியாதவர்களாக இருப்பது எமது கற்பித்தல் செயற்பாடுகளில் காணப்படக்கூடிய குறைபாடுகளே!
எனவே இக்குறித்த மகாநாட்டின் பின்னர் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளிலும் மாணவ மாணவியர்களை அணுகும் முறைகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு இம் மாற்றங்களின் பயனாக மாணவ மாணவியர் கல்வியில் மேம்பாட்டையும் அவர்களின் பல்துறை ஆற்றல்களில் மேம்பாட்டையும் வளர்க்க இந்த மகாநாடு உறுதுணையாக அமைய வேண்டும்.
யுத்தத்திற்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணக் கல்வி வலயம் கல்வியில் முதலிடம் வகித்தது. மீண்டும் 2009ற்கு பின்னர் படிப்படியாக வளர்ச்சியுற்று வருகின்ற போதும் இன்னும் முழுமையான நிலையை அடையவில்லை.
க.பொ.த.உயர்தரத்தில் வடக்கு மாகாணம் முதலிடம் பெற்றாலும் அறிவு ரீதியாக நாம் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றோம். இந்நிலை மாற்றப்பட வேண்டும். கா.பொ.த சாதாரண தர அடைவு மட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. பாடங்கள் தொடர்பான ஆசிரியர், மாணவ மாணவியரின் தொடர் அவதானிப்புக் குறைவே, பெறுபேறுகளின் வீழ்ச்சிக்கு காரணமாகும் என நினைக்கின்றேன்.
சாதாரண தரத்தைப் பொறுத்தவரையில் இருந்து கற்க வேண்டிய தேவை இல்லை. பாடசாலை வகுப்புக்களில் நடைபெறுகின்ற பாடங்களை ஊன்றிக் கவனித்தாலே 09 பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப் பெற்றுவிட முடியும்.
அண்மைக்காலமாக எமது மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை வேதனையைத் தருவதாக அமைகின்றது. யுத்த காலத்தில் கூட ஒழுக்கத்தை இறுக்கமாக கடைப்பிடித்த இந்த சமூகம், யுத்தம் முடிவுற்று சமாதான நிலை தோன்றிய பின்னர் ஒழுக்கக் குறைவுள்ள போதைப்பொருள் பாவனையில் நாட்டம் கொண்டிருப்பது மனவேதனையைத் தருகின்றது. வேண்டுமென்றே தமிழ் சமூகத்தை நன்கு திட்டமிட்ட முறையில் அழித்தொழித்து அவர்களின் கல்வி, கலாச்சாரம், மேம்பாடு ஆகிய அனைத்தையும் சீரழித்து ஒட்டுமொத்தத்தில் இந்த இனத்தை இல்லாமல் செய்யும் ஆரம்ப நடவடிக்கைகளாக இவை அமைந்துள்ளனவோஎன்று எண்ணத் தோன்றுகின்றது.
எம்மைச் சுற்றி ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் இராணுவ வீரர்கள் தரித்து நிற்கின்றனர். அதற்கும் மேலாக கடற்படை, விமானப்படை, பொலிஸார் என காவற் படைகள் தரித்து நிற்கின்றன. அப்படியிருந்தும் பல்லாயிரம் கிலோ கேரளக் கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் தினமும் கடல் மூலமாக கடத்தி வரப்படுவதாக அறிகின்றோம். அப்படியானால் இவற்றிற்கு யார் காரணம்? எமது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாகச் சீர்குலைக்க வேண்டும் என்ற முழு நோக்கில், பாடசாலைகளை நோக்கியதாக இப் போதைப்பொருள் விற்பனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிகின்றோம்.
எத்தனை தான் பிறரின் தூண்டுதல்கள் இருப்பினும் எமது மக்கள் எமது இளைஞர் சமுதாயம் இவற்றிற்கு அடிமையாகி ஒரு சில நன்மைகளுக்காக இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது அவர்களின் தாயைப் பழிக்குஞ் செயலுக்கு ஒப்பானதாகும்.
இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நீதிபதிகள் இறுக்கமான கட்டளைகளைப் பிறப்பித்து கடுமையான முயற்சிகனை மேற்கொண்டிருக்கும் அதே நேரம் அரசியல் தலைவர்கள், சமயப் பெரியார்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், பாடசாலை அதிபர்கள், மேலும் பெற்றோர்கள் எனப் பலரும் இவை பற்றிய மக்கள் விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருப்பது முக்கியம்.
அதிபர்களே, ஆசிரியர்களே உங்கள் பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற ஒவ்வொரு மாணவ மாணவியரையும் நெருங்கி அவதானியுங்கள். அவர்களின் அன்றாட செயல்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது தென்பட்டால் விரைந்து நடவடிக்கை எடுங்கள். உங்கள் அவதானிப்புக்களை பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அதன் மூலம் குறித்த மாணவனை அல்லது மாணவியை அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுத்து விடலாம். இதற்கு எம் உள்ளங்களில் அன்பும் கரிசனையும் அவசியம். மாணவ சமுதாயத்தின் மீது பரிவு அவசியம். வெறுப்பு கூடாது.
ஆசிரியர்களின் ஒழுக்கக் குறைவு பற்றியும் இப்போது வலுவாகப் பேசப்பட்டு வருகின்றது. பத்திரிகைகளும் அவற்றை ஊதிப் பெரிதாக்கி விடுகின்றன. இதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. 2595 ஆசிரியர்கள் வரையில் யாழ் கல்வி வலயத்தில் கற்பித்தல் கடமைகளில் ஈடுபட்டிருக்கின்ற போது அவர்களில் ஓரிருவர் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் இழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. இந்நிலை ஏற்றுக்கொள்ள முடியாததாகும். எனினும் ஆசிரிய ஆசிரியைகள் ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டும் என்பது நியதி. தேவையற்ற தனியான வகுப்புகள், விடுமுறையில் தனிப்பட்ட வகுப்புக்கள் என்பவற்றைத் தவிர்ப்பது பல பிரச்சனைக்களுக்குத் தீர்வாக அமையும் என்பதை மட்டும் ஒரு அறிவுரையாகக் கூறி ஏனைய விடயங்களைப் பற்றி அவதானிப்போம்.
இன்றைய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் காணப்படுகின்ற பாரிய குறைபாடு அவர்களின் கற்றல் முயற்சியானது எதிர்காலம் பற்றிய தீர்க்கமான ஒரு முடிவின்றி க.பொ.த சாதாரணதரம் சித்தி பெற்றுவிட்டதுடன் க.பொ.த உயர்தரத்தில் மிகச் சுலபமான மூன்று பாடங்களை எதுவித எதிர்கால சிந்தனையுமின்றி தெரிவு செய்து அதிலும் சித்தி அடைந்து பல்கலைக்கழக பட்டப் படிப்பினையும் முடித்து 25-27 வயதுகளில் வெளியேறுகின்ற போது தான் வெளிவருகின்றது. அவர்களின் கற்றல் முயற்சிகளில் ஏற்பட்ட பிழைகள் அப்போது தென்படுகின்றன. வேலை தேடுகின்ற போது ஒரு வேலையுங் கிடைப்பதில்லை. சுயமாகத் தொழில் செய்வதற்கும் இக் கற்றல் முறைமை உதவுவதில்லை.
தொழில் அதிபர்கள் தென்பகுதியில் இருந்து வேலையாட்களைக் கொண்டுவந்து தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்துகின்றார்கள். கேட்டால் அனுபவமுடைய திறன் படைத்த தொழிலாளர்கள் உங்களிடம் இல்லை என்கின்றார்கள்.
Heavy vehicles, Farm vehicles, Caterpillar, JCB என பல கனரக வாகனங்களுக்கு எம்மிடம் சாரதிகள் இல்லை. தென் பகுதியில் இது போன்ற கனரக வாகனங்களை இயக்குவதற்கு பயிற்சி வழங்குகின்ற பல பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு சாரதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. வடபகுதியில் உள்ள சாரதிகள் இப்பயிற்சியைப் பெற விரும்பினால் வடமத்திய மாகாணத்திற்குப் போக வேண்டும். வடபகுதியில்,ஏன் கொழும்பில் கூட,எத்தனையோ செல்வந்தர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இது போன்ற ஒரு பயிற்சி நிலையத்தை உருவாக்குவதற்கு யாரும் முன்வருவது இல்லை.
தொழிலை நோக்கிய கற்றல் முறைமைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக இப்போது க.பொ.த உயர்தர வகுப்புக்களில் தொழில் நுட்பப்; பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கற்பிக்கப்படுகின்றன. இப் புதிய முயற்சி வரவேற்கப்படக்கூடியது. ஆனால் பயிற்சி அளிக்கின்ற அல்லது கற்பிக்கின்ற ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு முன்பதாகத்தம்மை நன்றாகத் தயார் செய்து பாடத்தில் மிகச் சிறந்த ஒரு தெளிவைப் பெற்ற பின்னரேயே இப் பாடங்களைக்கற்பித்தல் வேண்டும். ஏனெனில் தொழில்நுட்பப்பாடங்கள் எழுந்தவாரியாகக் கற்பிக்க முடியாதவை என்பதை நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என எண்ணுகின்றேன்.
தொழில்நுட்ப ரீதியாக கற்பிக்கப்படுகின்ற அனைத்து பாட வேளைகளிலும் செயன்முறையுடன் கூடிய கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்தி மாணவ மாணவியர் இப்பாடங்களில் சிறந்த அறிவைப் பெறச் செய்வதன் மூலமாக இம் மாணவ மாணவியரை எதிர்காலத்தில் சிறந்த வாகனத்திருத்துனர்களாக, இலத்திரனியலாளர்களாக, மின்னியலாளர்களாக,பொருத்துனர்களாக,அலுமினியப் பொருத்துனர்களாக,கடைச்சல் பட்டறையாளர்களாக இது போன்ற இன்னோரன்ன சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதற்கு நாங்கள் வழங்குகின்ற தொழில்நுட்ப அறிவு அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். அமெரிக்க அறிஞர் நோகம் சொம்ஸ்கி அவர்கள் கூறினார் “கற்பித்தல் என்பது மாணவர்களைத் தாமாகப் படிக்க உதவ வைக்கும் ஒரு செயற்பாடு” என்று. ஆகவே எமது மாணவச் செல்வங்களைச் சிந்திக்க வைக்கவும் செயன்முறைப் பயிற்சி பெறவும் தத்தமது கால்களில் அவர்களை நிற்க வைக்கவுமே கல்வி பயன்படவேண்டும். மாணவ சமுதாயம் முன்னேற ஆசிரிய சமுதாயம் இயக்கிகளாக, இயக்குநர்களாக, முடுக்கிகளாகச் செயற்பட வேண்டும்.
இவை பற்றி உங்களுக்குக்கூடிய விளக்கத்தையும் அறிவையும் ஊட்டுவதற்காகவேஇங்கே விசேடமாக பேராசிரியர்கள், அறிஞர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மாணவர்களின் உளப் பாங்கு,வாண்மை விருத்திபோன்ற விடயங்களில் உங்களுடன் கருத்துப் பரிமாற இங்கே வருகை தந்துள்ளார்கள், தரவிருக்கின்றார்கள்.எனினும் எனது அவதானங்களில் உதித்த சிலவற்றையேஉங்களுடன் இதுவரையில்பகிர்ந்திருக்கின்றேன். நான் ஒரு கல்வியாளன் அல்ல. ஆனால் மக்கள் மீது கரிசனை கொண்ட அன்பு கொண்ட ஒரு சாதாரண மனிதன். அன்பினால் ஆகாதது ஒன்றில்லை என்பது எனது வாதம். இனிவரும் காலங்களில் ஆசிரிய ஆசிரியைகளான நீங்கள் அன்பு மிக்கவர்களாக வாழ்ந்து கல்வியில் மேம்பட்ட ஒழுக்கசீலர்களாக, அறிவில் மேம்பட்டவர்களாக,கல்வியைத் தேடிக்கற்கும் ஆற்றல் கொண்டவர்களாக எமது மாணவ மாணவியரை மாற்றி அமைக்க வல்லவர்களாகஅல்லும் பகலும் பாடுபடுவீர்களாக என வாழ்த்தி வாய்ப்புக்கு நன்றி கூறி நிறைவு செய்கின்றேன். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

மாணவர்களை கல்வியில் மேம்பட்டவர்களாக மாற்ற வேண்டிய தார்மீகக் கடமை அனைவருக்கும் உண்டு: வடமாகாண முதலமைச்சர்
Reviewed by Author
on
May 06, 2016
Rating:

No comments:
Post a Comment