தடைப்பட்டிருந்த கிழக்கு பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்....
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமுலை வளாகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, ஏட்டிக்குப் போட்டியான இரண்டு ஆர்ப்பாட்டங்கள் கடந்த மாதம் 26 மற்றும் 27ம் திகதிகளில் இடம்பெற்றன.
தமிழ் மாணவர்களினால் வந்தாறுமுலை வளாகத்தில் கடந்த 18ம் திகதி முள்ளிவாய்க்கால் தினம் நினைவு கூரப்பட்டது.
இந்நிகழ்வு தொடர்பான படங்களை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்திருந்த தமிழ் மாணவன் மீது சிங்கள மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸிலும் புகார் பதிவாகியிருந்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தமிழ் மாணவர்கள் வளாகத்தின் முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஏற்கனவே சிங்கள மாணவர்களில் சிலர் இன ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தமிழ் மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.
தமிழ் மாணவன் மீதான தாக்குதல் தொடர்பாக இரு சிங்கள மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த 27.06.2016 முதல் விரிவுரைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது
இந்த தடையை நீக்கக் கோரி சிங்கள மாணவர்கள் 27.06.2016 அன்று வளாகத்தின் பிரதான வாயிலை மூடி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிங்கள மாணவர்களின் ஆர்பாட்டம் காரணமாக சுமார் 3 மணித்தியாலங்கள் விரிவுரையாளர்கள் உட்பட எவரும் வளாகத்திற்கு உள்ளேயிருந்து வெளியேற முடியாத நிலை காணப்பட்டது.
இதன் பின்னர் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் இரு சிங்கள மாணவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை தொடர்ந்து இடம்பெறுகின்றது.
அத்துடன் மாணவர்களின் பதில் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது என்று தெரிவித்த பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ஜயசிங்கம், விசாரணைகள் முடிவும் வரை வகுப்புத் தடை இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தடைப்பட்டிருந்த கிழக்கு பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்....
Reviewed by Author
on
June 09, 2016
Rating:

No comments:
Post a Comment