வட கிழக்கில் அதிகரிக்கும் இராணுவ பிரசன்னம் அமைதிக்கு உகந்ததல்ல!
வடக்கு, கிழக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னம் அமைதிக்கு உகந்ததல்ல என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார் .
தேசிய சமாதானத்திற்காக சமாதானம் மற்றும் சர்வ இன நல்லிணக்கத்திற்கான சர்வமத சமூகங்களிடையே ஒருமைப்பாட்டை வலுவூட்டும் அமர்வு வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்கால அரசியல் சூழலில் தேசிய சமாதானப் பேரவையின் வகிபாகம்' எனும் தொனிப்பொருளில் அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
இராணுவத்தினர் இன்னமும் வடக்கு கிழக்கு வாழ் மக்களது வாழ்விடங்களில் நிலைகொண்டிருப்பதால் அமைதிக்கான சூழ்நிலை இப்பொழுதும் அச்சத்துடன்தான் கழிகிறது.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் இந்த நாடு எப்படி ஆளப்பட வேண் டும் என்று எந்த ஒப்பந்தங்களும் இல்லை. இது ஒரு துரதிஷ்ட நிலைமை.
கடந்த 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் தேசிய சமாதானத்தையும் இன நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கும் இதுதான் மிகச் சிறந்த காலகட்டம் என நான் நினைக்கின்றேன்.
யுத்தம் நிறைவடைந்து விட்டது. ஆயுத முரண்பாடுகள் இல்லை, ஆயுதக் குழுக்கள் இல்லை. ஆகவே இதைவிட சிறந்த கால கட்டம் இருக்கவே முடியாது.
அத்துடன் இரண்டு மிகப் பெரிய அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை, இலங்கை சிறுபான்மை சமூகங்களின் தலைவர்களும் ஆட்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றார்கள்.
ஆகவே அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே ஓர் அரிய சந்தர்ப்பம்.கடந்த காலத்தில் ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியும் எதிரும் புதிருமாகவே பணியாற்றி வந்தன. ஆனால், அந்த நிலைமை தற்போது இல்லை.
மஹிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே வெள்ளை வான் பீதி உட்பட அனைத்து அநியாயங்களும் நிறுத்தப்பட்டன .
ஆனால், புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இன்னமும் தாமதம் இருந்து வருகின்றது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான படிமுறை நடவடிக்கைகளை நாட்டு மக்களுக்குக் கசிய விட்டால் அது இனவாதிகளுக்கு அவலாக மாறி இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நடவடிக்கைகளை சீர்குலைத்து விடும் என்பதால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு நடவடிக்கைகளை உள்ளரங்கமாக எடுத்து வருகின்றார்.
அது அரசின் யுக்தித் திட்டமிடலாக இருக்குமோ என்று நான் கருதுகின்றேன்.நாட்டின் நல்லிணக்கத்திற்கு மத மற்றும் சமூகத் தலைவர்களின் பங்கு முக்கியமானது.
சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், கருணை, பொறுமை, அன்பு, அஹிம்சை போன்ற குணாம்சங்கள் சகோதரத்துவ மத போதனைகள் மூலம் சமூக இணக்கப்பாட்டிற்குப் பாரிய பங்களிப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றார்.
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதத் தலைவர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
வட கிழக்கில் அதிகரிக்கும் இராணுவ பிரசன்னம் அமைதிக்கு உகந்ததல்ல!
Reviewed by Author
on
June 06, 2016
Rating:

No comments:
Post a Comment