அண்மைய செய்திகள்

recent
-

விமானத்தை இயக்கிய முதல் நாள் அனுபவம் மறக்க முடியாதது.... சாதனைப்பெண்---.காவியா,


தனியாக விமானத்தை இயக்கி, 700 அடி உயரம் சென்று, 15 நிமிடங்கள் வானில் வட்டமிட்டேன். அப்போது மகிழ்ச்சியோடு சேர்ந்து எனக்கு தன்னம்பிக்கையும் அதிகரித்தது’’ என்று கூறும் காவியா, சாதனை பெண்கள் பட்டியலில் தன்னையும் இணைக்கத் துடிக்கும் இளம் பயிற்சி பைலட்.

20 வயதே ஆன காவியா விமான பைலட்டுக்கான பயிற்சியை பெங்களூரு ஜக்கூரில் உள்ள அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பெற்று வருகிறார். மதுரையை சேர்ந்தவர். தந்தை ரவிக்குமார், மதுரை அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர். தாயார் கல்பனா. தங்கை சவுமியா 9–ம் வகுப்பு மாணவி.

விமானம் ஓட்டவேண்டும் என்ற லட்சியத்தை சிறுவயதிலேயே காவியா உருவாக்கியிருக்கிறார். நடுத்தர வருவாய் குடும்பத்தை சேர்ந்த அவர் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தனது லட்சியத்தை அடைந்திருக்கிறார்.

பெங்களூருவில் மழைச் சாரலுக்கு மத்தியில் விமான பயிற்சித்தளத்தில் காவியாவை சந்தித்தோம். சீருடையில் கம்பீரமாக தோன்றும் அவர், தான் கடந்து வந்த பாதையையும்– பயிற்சி அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘எனது தந்தைக்கு 4 சகோதரிகள். அவர்கள் துபாயில் வசிக்கிறார்கள். நான் 6–ம் வகுப்பு படித்தபோது எனது அத்தைகள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் துபாயில் இருந்து இந்தியாவிற்கு விமானத்தில் வந்ததை பெருமையாக என்னிடம் கூறிக்கொண்டிருந்தார்கள். அந்த அனுபவத்தை அவர்கள் விவரித்தபோது, ‘விமானத்தில் பயணம் செய்த அனுபவமே இவர் களுக்கு இவ்வளவு ஆச்சரியமாக இருந்தால், அந்த விமானத்தை இயக்கும் அனுபவம் எவ்வளவு சிலிர்ப்பாக இருக்கும்!’ என்ற கோணத்தில் என் மனப்பறவை பறந்து வானத்தை வட்டமிட்டது. உடனே நான் எனது அத்தைமார்களிடம் ‘நீங்கள் விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்கள். நான் அது போன்ற விமானத்தில் விமானியாக இருந்து அந்த விமானத்தையே இயக்க விரும்பு கிறேன். இதை ஒரு சபதமாக எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்போது அவர்களில் யாரும் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.

அன்று முதல் என் மனதில் விமானம் பற்றிய விஷயங்களே ஓடிக்கொண்டிருந்தது. எனது பெற்றோரிடம், நான் பைலட் ஆவேன் என்று அடிக்கடி கூறி வந்தேன். ஆனால் அவர்களோ அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டார்கள். நானோ பைலட் ஆகும் லட்சியத்தில் இருந்து இம்மியளவுகூட நழுவவில்லை’’ என்கிறார்.

காவியா 15 வயதிலேயே பைலட் பயிற்சியை பற்றி விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்.

‘‘10–ம் வகுப்பு படித்து முடித்ததும், புதுச்சேரியில் உள்ள விமான பயிற்சி பள்ளிக்கு போன் செய்து, ‘விமான பயிற்சியில் சேர வேண்டும்’ என்று கூறி விவரம் கேட்டேன். அவர்களோ 12–ம் வகுப்பு முடித்தால் மட்டுமே சேர முடியும் என்று சொல்லிவிட்டனர். அதனால் பள்ளிப் படிப்பை தொடர்ந்தேன். 12–ம் வகுப்பை முடித்தேன்.

தேர்வு முடிவு வெளியானதும், எனது தோழிகள் என்ஜினீயரிங் சேர விண்ணப்பிக்குமாறு கூறினார்கள். என் பெற்றோரும் அந்த படிப்பிற்கே என்னை அனுப்ப விரும்பினார்கள். ஆனால் நான் திட்ட வட்டமாக மறுத்துவிட்டேன். எனது ஒரே நோக்கம், பைலட் பயிற்சியில் சேருவது தான் என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். அப்போது தான் எனது லட்சியம் விளையாட்டுத் தனமானது அல்ல. உணர்வுப்பூர்வமானது என்பதை பெற்றோர் புரிந்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்கள்’’ என்கிற காவியா, அடுத்து பைலட் பயிற்சியில் சேர முழு முயற்சியினை எடுத்திருக்கிறார்.

‘‘எனது தோழியின் தாயார் மூலம் பெங்களூருவில் விமான பயிற்சி பள்ளி இருப்பதை அறிந்தேன். அதில் சேர விண்ணப்பித்தேன். ஒரே நாளில் 3 தேர்வு களை எழுதினேன். அந்த மூன்றிலும் தேர்ச்சியும் பெற்றேன். அடுத்த வாரமே பயிற்சியில் சேரும்படி அதிகாரிகள் கூறினார்கள். ‘என் கனவு நிறைவேறப்போகிறது’ என்று நினைத்து எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். அந்த மகிழ்ச்சி சில விநாடிகளிலேயே கரைந்து போனது.

பைலட் பயிற்சியை முடிக்க 20 லட்சம் ரூபாய் செலவாகும் என்றார்கள். அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது? என்று நான் விழிபிதுங்கி நிற்க, எனது பெற்றோரும் அவ்வளவு பணத்தை தங்களால் கட்ட இயலாது என்று கூறி, வேறு படிப்பில் சேர்ந்துவிட சொன்னார்கள்.

அதனால் பைலட் கனவு கலைந்து போய்விடுமோ? என்ற கவலை எனக்குள் தொற்றிக்கொண்டது. ஆனாலும் நான் மனந்தளராமல் பயிற்சிக்காக தயாராகிக்கொண்டிருந்தேன். அப்போதுதான், நான் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவள் என்பதால், இதற்கு மத்திய அரசு 20 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் என்ற தகவல் தெரிய வந்தது. அதுபற்றி பெற்றோரிடம் எடுத்துச்சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினேன். என்னுடைய ஆர்வத்துக்கு அணை போடாமல் கஷ்டப்பட்டு 7 லட்சம் ரூபாய் முதலில் செலுத்தினார்கள். பைலட் பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன். 4 பேர் அமரும் குட்டி விமானத்தில் பயிற்சி பெற்று வருகிறேன்.

பயிற்சி பள்ளியில் சேருவதற்கு முன்பு விமானத்தை அன்னாந்து பார்த்த அனுபவம் மட்டுமே எனக்கு உண்டு. விமானத்தில் ஏறி பயணித்த அனுபவம் எதுவும் கிடையாது. முதல் இரண்டு மாதங்கள் விமானத்திற்கு வெளியேதான் பயிற்சி கொடுத்தார்கள். முதல் நாள் விமானத்தில் காலடி எடுத்துவைத்ததும் உடலே சிலிர்த்ததுபோல் இருந்தது. இரண்டாவது நாள் பைலட் இருக்கையில் அமர்ந்து விமானியின் அறிவுரைப்படி விமானத்தை இயக்கினேன். தொடர்ந்து பயிற்சி பெறுகிறேன். விமானத்தில் பறக்கும்போது என்னை நானே பெருமித மாக உணர்கிறேன். விமானத்தை இயக்கும்போது எனக்கு பயம் எதுவும் ஏற்படுவதில்லை’’ என்கிறார்.

காவியாவுடன் பத்து பேர் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார்கள். அதில் இவர் ஒருவர் மட்டுமே தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்.

‘‘விமானத்தில் ஒரு மணி நேரம் பயிற்சி செய்ய 10 ஆயிரம் ரூபாய் கட்டணம். என்னிடம் போதிய அளவுக்கு பணம் இல்லாததால் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் பயிற்சி மேற்கொள்கிறேன். இப்போது மத்திய அரசு 20 லட்சம் ரூபாய் உதவித்தொகையை ஒதுக்கியுள்ளது. இனி பணப்பிரச்சினை ஏற் படாது. நான் விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்து 2½ ஆண்டு ஆகிறது. வருகிற டிசம்பர் மாதத்துடன் பயிற்சி நிறைவடைகிறது. இனி, ‘கிராஸ் கன்ட்ரி’ அடிப்படையில் விமானத்தை ஓட்ட உள்ளேன். தனியாக 400 நாட்டிக்கல் மைல் தூரம் வரை விமானத்தை இயக்குவேன்.

என்னுடன் 10 பேர் இந்த பயிற்சியில் சேர்ந்தனர். இதில் 9 பேர் பல்வேறு காரணங்களால் பயிற்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். நான் மட்டுமே தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறேன். இந்த பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு ஐதராபாத்தில் மல்டி என்ஜின் விமானத்தை இயக்கும் பயிற்சியில் சேர உள்ளேன். இதற்காக தேர்வு எழுதியுள்ளேன். அந்த விமானத்தை 25 மணி நேரம் இயக்க வேண்டும். அதன் பிறகு பயணிகள் விமானத்தை இயக்கும் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது. போயிங்– 787 விமானத்தை இயக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்கு முன்பாக ஏர்பஸ்–320 விமானத்தை ஓட்ட வேண்டும். பறந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை’’ என்று கூறும் காவியா, மாணவ– மாணவிகளுக்கு தனது அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனை தருகிறார்.

‘‘மாணவ– மாணவிகள் எதை படிக்க விரும்புகிறார்களோ அதை படிக்கவேண்டும். நிச்சயமாக ஒவ்வொருவராலும் சாதிக்கமுடியும். அதனால் தனது லட்சியங்களில் இருந்து அவர்கள் ஒருபோதும் பின்வாங்கிவிடக்கூடாது’’ என்கிறார்!

ஜக்கூர், தலைமை விமான பயிற்சியாளர் அமர்ஜித்சிங் டங்கே கூறுகையில், “காவியா சிறப்பான முறையில் பயிற்சி பெற்று வருகிறார். அவர் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்த துறையில் அவர் சாதனையாளராக திகழ்வார்’’ என்று நம்பிக்கையூட்டுகிறார்.


விமானத்தை இயக்கிய முதல் நாள் அனுபவம் மறக்க முடியாதது.... சாதனைப்பெண்---.காவியா, Reviewed by Author on August 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.