மகிந்த ராஜபக்சவின் கர்ச்சிப்பு ஒரு திட்டமிட்ட நாடகம்
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு நடந்த கதிதான் ஜனாதிபதி மைத்திரிக்கும் நடக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கர்ச்சித்துள்ளார்.
புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தால் மகிந்த ராஜபக்ச தொடர்பான இரகசியங்களை வெளியிட்டு அவரின் சாயத்தை வெளுக்கச் செய்வேன் என்று ஜனாதிபதி மைத்திரி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ரணசிங்க பிரேமதாஸவுக்கு ஏற்பட்ட கதிதான் ஜனாதிபதி மைத்திரிக்கும் ஏற்படும் என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இக் கருத்தைக் கூறிய அவர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளதுடன் எனினும் இப்போது புதிய அரசியல் கட்சியை ஒன்றை ஆரம்பிப்பதற்கு உரிய சூழ்நிலை இல்லை என்றும் புதிய கட்சியை நிதானமாகவே ஆரம்பிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எச்சரிக்கையையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் எதிர்வு கூறலையும் ஒப்பிட்டு நோக்கும் போது மகிந்த ராஜபக்ச தொடர்பான இரகசியங்களை ஜனாதிபதி மைத்திரி வெளியிடப் போவதில்லை என்பதும் மகிந்த ராஜபக்ச புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க மாட்டார் என்பதும் தெரியவரும்.
அப்படியானால் ஏன்தான் இவர்கள் இருவரும் திடீரென ஒருவரை ஒருவர் எச்சரிப்பதுபோல பேசிக் கொள்கின்றனர்; அதற்கான தேவை என்ன என்ற கேள்வி எழுகை பெறும்.
இங்குதான் தமிழ் மக்கள் மிகவும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். அதாவது நல்லாட்சி ஏற்பட்டும் தமிழ் மக்களுக்கு எந்த விடிவும் கிடைக்க வில்லை என்ற கருத்து இப்போது பரவலாகப் பேசப்படுகிறது.
நல்லாட்சி என்பது நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்துவதையும் நோக்காகக் கொண்டது என்று கூறப்படுகின்ற போதிலும் இன்று வரை போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களில் குடியமர முடியவில்லை.
விடுதலைப் புலிகளுடன் சேர்ந்திருந்தவர்கள் ஏதோ ஒரு வகையில் அரசுடன் இணைந்து சுதந்திரமாக நடமாடும் போது, புலிகள் அமைப்புக்கு உதவி புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நீண்டகாலமாக விளக்கம் விசாரணைகள் இன்றி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இன்னமும் விடுதலை வழங்கப்படவில்லை.
தவிர காணாமல் போனவர்களின் பெற்றோர் இன்று வரை அழுது புலம்பி வதங்கிப் போகின்றனர்.
மேலாக பெளத்த விகாரைகளை தமிழர் தாயகத்தில் அமைக்கும் அநியாயம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நல்லாட்சி என்ன செய்தது? என்ன செய்கிறது? என்ற கேள்வி சர்வதேச சமூகத்திடம் எழுமல்லவா?
இதனை தவிர்ப்பதற்கு நல்லாட்சி இன்னமும் இஸ்திரமான நிலையில் இல்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பு நல்லாட்சிக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
ஆகையால் நல்லாட்சி நிலைபேறு அடையும் வரை தமிழ் மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
இப்போது இலங்கையில் தமிழ் மக்களின் விவகாரம் பிரச்சினையல்ல மாறாக மகிந்த ராஜபக்ச தரப்பே பிரச்சினை. எனவே அவர்கள் அடங்கும் வரை நல்லாட்சிக்கு தமிழ் மக்கள் ஒரு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்றொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தவே அவரும் இவரும் எச்சரிக்கை செய்கின்றனர். இதுவே உண்மை. என்றுணர்தல் வேண்டும்.
மகிந்த ராஜபக்சவின் கர்ச்சிப்பு ஒரு திட்டமிட்ட நாடகம்
Reviewed by NEWMANNAR
on
August 24, 2016
Rating:

No comments:
Post a Comment