விஜயகலாவின் வாக்குறுதியால் போராட்டத்தை கைவிட்ட மக்கள்....
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது காணிகளிலிருந்து இராணுவம் இரண்டு மாதத்திற்குள் வெளியறும் என மகளீர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் மக்களின் காணிகளிலிருந்து வெளியேறிய பின்னர் மாதம் வாக்குறுதியளித்தவாறு மூன்று மாத காலத்துக்குள் மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களை நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மகளீர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேட்டறிந்து கொண்டார்.
Vijeyakala Visted to Paravippanjan
அத்துடன் இராணுவத்தினர் வசமுள்ள வீடுகளையும் பார்வையிட்ட மகளீர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பார்வையிட்டிருந்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி வழங்கிய வாக்குறுதி க்கமைய பரவிப்பாஞ்சான் பகுதியிலிருந்து இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் பொதுமக்களின் காணிகள் இராணுவ முகாமாக கடந்த ஏழு வருடங்களாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம திகதி மாலை முதல் 17 குடும்பங்கள் முகாமுக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பாரிய அளவில் போராட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் அதுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
எனினும் கஜேந்திரகுமாரின் கோரிக்கை தொடர்பில் எந்தவித பதிலையும் தெரிவிக்காத பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை மகளீர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொலைபேசி ஊடாக மூன்று மாதகாலத்திற்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து பரவிப்பாஞ்சான் மக்கள் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விஜயகலாவின் வாக்குறுதியால் போராட்டத்தை கைவிட்ட மக்கள்....
Reviewed by Author
on
September 11, 2016
Rating:

No comments:
Post a Comment