நியூமன்னார் இணையக்குழுமத்தின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
தீயவையினை தீயிலிடுவோம்
தீர்க்கமான முடிவுடன் பயின்று விடுவோம்.....
திசைகள் எட்டும் வென்று விடுவோம்- இத்
தினமே ஒன்று படுவோம்.....
தீப ஒளி
திசைகள் எல்லாம் எம் வெளி
திருநாள் வழி
தித்திக்கும் விழி
நியூமன்னார் இணையக்குழுமத்தின் சார்பாக உலகவாழ் மக்கள் அனைவருக்கும் எமது வாசகர்களுக்கும் மனமார்ந் த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
தீபாவளி பற்றி பாரதிதாசன் கவிதை_
*நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?*
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
'உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?
என்று கேட்பவனை, 'ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று
கேட்கும் நாள், மடமைகிழிக்கும்நாள்,**அறிவை
ஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
*தீபாவாளி ஆயின் சீ என்று விடுவிரே!*
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
கார்த்திகைப் பண்டிகைதான் தென்னாட்டில் தீபஒளி திருநாள்
சம்பந்தர் தேவாரம் - திருமுறை 2.47.3
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் .
பொ-ரை : பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும் , தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இள நகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ ?
கு-ரை: வளை - வளையல். மறுகு - தெரு. வண்மை - தெரு வினர் கொடைவளம். துளக்கு - அசைவு. தளர்வு, வருத்தம். இல் - இல்லாத. இறைவனைக் குறித்தால் வருத்தமில்லாதவன் என்க. கபாலீச் சரத்தைக் குறித்தால் அசைவில்லாத, தளர் வில்லாத என்க . தளத்து - சாந்தினை. கார்த்திகை விளக்கீடு இளமகளிர் கொண்டாடும் திருவிழா . கார்த்திகைத் திருவிளக்கீட்டு விழாவின் தொன்மையைப் பழந்தமிழ் நூல்களிலும் சிவாகம புராணங்களிலும் உணர்க
நியூமன்னார் இணையக்குழுமத்தின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Reviewed by Author
on
October 29, 2016
Rating:
Reviewed by Author
on
October 29, 2016
Rating:



No comments:
Post a Comment