மன்னார் பெரிய பாலத்தடியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற பல நூற்றுக்கணக்கான மீனவர்களை திருப்பி அனுப்பிய கடற்படை-Photos
மன்னார் பெரிய பாலத்தடியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை(4) காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களை கடற்படையினர் கடலில் வைத்து சோதனையிட்டதோடு அவர்களை திருப்பி கரைக்கு அனுப்பியமையினால் மீனவர்கள் ஆத்திரமடைந்ததோடு கடற்கரையில் தமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
மன்னார் பள்ளிமுனை,பனங்கட்டுக்கொட்டு,சாந்திபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்காக மீனவர்கள் மன்னார் பெரிய பாலத்தடி கடற்கரையூடாக இன்று(4) வெள்ளிக்கிழமை காலை வழமை போன்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
படகு ஒன்றில் சுமார் 8 மீனவர்கள் வரை தொழிலுக்குச் சென்ற நிலையில் கடலில் நின்ற கடற்படை படகுகளை இடைமறித்து சோதனைகளை மேற்கொண்டதோடு,ஒரு படகில் 3 மீனவர்கள் மாத்திரமே தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்றும்,ஏனையவர்கள் திரும்பிச் செல்லுமாறும் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினருக்கு மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் படகு ஒன்றில் 3 மீனவர்களைத் தவிர ஏனையவர்களை தொழிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும், ஏனையவர்களை திருப்பி அனுப்புமாறும் உத்தரவிட்டதன் காரணத்தினாலேயே கடற்படை குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட கடற்படையினர் மீனவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் படகில் கொண்டு செல்லுகின்ற ஒவ்வெறு பொருட்களுக்கும் பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக கடலில் இருந்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குறித்த பிரச்சினைகளை தெரிவித்த போது கடற்படையினர் மீனவர்களை இடை மறித்தமைக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த மீனவர்கள் அனைவரும் தொழிலுக்குச் செல்லாது கரை திரும்பினர்.
பின்னர் கடற்கரையில் ஒன்று திறண்ட மீனவர்கள் கடற்படையினருக்கும், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கும் எதிராக தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் வருகை தந்து மீனவர்களுடன் கலந்துரையாடினர்.
இதன் போது மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
எனினும் மீனவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் செயற்பாட்டின் காரணமாகவே மீனவர்கள் பாதீப்பை எதிர் நோக்குவதாக அவ்விடத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இவ்விடையம் தொடர்பாக தொலைபேசியில் தெரியப்படுத்தியதோடு,கடற்படை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.
இதன் போது கடற்கடை உயரதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்தார்.
-மேலும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோரும் சம்பவ இத்திற்கு வருகை தந்து மீனவர்களுடன் கலந்துரையாடியதோடு,கடற்படை உயரதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
கடற்படை உயர் அதிகாரிகளுடன் அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன் போது கடற்தொழில் திணைக்களத்தினால் கடற்படைக்கு வழங்கப்பட்ட கடிதம் ஒன்றை கடற்படை அதிகாரி கொண்டு வந்தார்.
குறித்த கடிதமானது சிலின்டர் மூலம் அட்டை பிடிப்பவர்களின் படகுகளில் 3 பேரை தவிர யாரும் இருக்க முடியாது என குறித்த கடிதத்தில் உள்ளது.
குறித்த கடிதத்தில் உள்ளவற்றை கடற்படையினர் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் சாதாரணமான படகு ஒன்றில் தொழிலுக்குச் செல்ல 8 பேர் பயணிக்க முடியும் என்றும்,அதற்கான உபகரணங்களை கொண்டு செல்ல முடியும் என எழுத்து மூலம் தமக்கு கடிதம் ஒன்றை வழங்குமாறு கடற்படை அதிகாரி மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கமைவாக கடிதம் வழங்குவதாக உறுதியளித்தார்.இந்த நிலையில் மீனவர்கள் எவ்வித பிரச்சினைகள் இன்றியும் இயல்பாக மீன் பிடிக்க முடியும் என்று மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
எனினும் குறித்த மீனவர்கள் அரசாங்கம் மீது பாரிய குற்றச்சாட்டை அவ்விடத்தில் சுமத்தியுள்ளனர்.
தமக்கு மட்டும் தான் இவ்வாறான நடைமுறைகளை அமுல் படுத்தி கடற்படையினர் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாகவும்,ஆனால் தென்பகுதியில் இருந்து வருகை தந்து மன்னார் சௌத்பார் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திடம் எந்தவித அனுமதிகளையும் பெற்றுக்கொள்ளுவதில்லை என்றும் கடற்படை அவர்கள் மீது எவ்வித கெடுபிடிகளையும் மேற்கொள்ளுவதில்லை என குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(4-11-2016)
மன்னார் பெரிய பாலத்தடியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற பல நூற்றுக்கணக்கான மீனவர்களை திருப்பி அனுப்பிய கடற்படை-Photos
Reviewed by NEWMANNAR
on
November 04, 2016
Rating:
No comments:
Post a Comment