நில மீட்புக்கு ஆதரவு தெரிவித்து தென்பகுதி மக்களும் களத்தில் யாழில் நேற்று கண்டன போராட்டம்...
விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்பகுதி மக்களும் இணைந்ததாக வடபகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் நேற்று 23ஆவது நாளை எட்டியிருந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.
கேப்பாப்பிலவு பகுதியில் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பெரும் கண்டனப் போராட்டம், யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தின் முன்பாக நேற்றுக் காலை 9 மணியளவில் ஆரம்பமாகி யாழ். மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட செயலகம் முன்பும் முன்னெடுக்கப்பட்டுள் ளது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், யாழ்.மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம், திருகோணமலை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம், டெலிகொம் மனிதவலு போராட்ட ஒற்றுமை முன்னணி உட்பட தென்பகுதி மக்களுடனான பல்வேறு அமைப்புக்கள் குறித்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது அரசியல் கைதிகளது விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் கண்ட றியப்பட வேண்டும் மற்றும் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை “நல்லாட்சி அரசே எமது நிலமே எமது வாழ்வு”, “இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள எமது காணிகள் உடனே விடுவிக்கப்பட வேண்டும்”, “பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு தீர்வு என்ன?” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
கேப்பாப்பிலவு உட்பட இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களது காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அன் ரனி ஜேசுதாசன், காணிகள் விடு விக்கப்படும்வரை தேசிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை யுத்தத்தைக் காரணம் காட்டி அபகரிக்கப்பட்ட மக்களது காணிகள் விடுவிக்கப்படாவிட்டால், குறித்த காணிகளுக்குள் அத்துமீறி நுழைவோம் என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் எஸ். சஜீவன், நல்லாட்சி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுமாத்திரமன்றி தமது சொந்த நிலங்கள் கடற்படையினராலும் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மக்கள், காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்னால் இடம்பெற்ற போராட்டத்தின் நிறைவில் காணி விடுவிப்பு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய மகஜர், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெ.சுகுணவதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிலமீட்புக்கான மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் - நெடுந்தீவிலும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டிருந்தது.கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலமீட்பு போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இணைந்து தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
நில மீட்புக்கு ஆதரவு தெரிவித்து தென்பகுதி மக்களும் களத்தில் யாழில் நேற்று கண்டன போராட்டம்...
Reviewed by Author
on
February 24, 2017
Rating:

No comments:
Post a Comment