யாழ் மண்ணை பூஜை அறையில் வைத்து வணங்கும் விஜய்!
அழித்து ஒழிக்கப்பட்ட ஒரு இனத்தில் இருந்து தான் உலகத்தை அசத்துகின்ற தலைவன் பிறப்பான் என கவிஞர் பா.விஜய் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்த கருத்தினை அவர் வெளியிட்டார்.
அழித்து ஒழிக்கப்பட்ட ஒரு இனத்தில் இருந்து தான் உலகத்தை அசத்துகின்ற தலைவன் பிறப்பான் என்று கூறினார்.
ஒட்டு மொத்த தமிழ் இளைஞர்களை உலகம் இப்போதுதான் திரும்பி பார்த்துள்ளது. அதற்கான சிறிய உதாரணமாக மெரினா கடற்கரையில் தமது தனித்துவ கலாச்சாரத்தை மீட்பதற்காக ஒரு அரசை எதிர்த்து இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட அறவழிப் போராட்டத்தை குறிப்பிடலாம்.
உலக பிரசித்தி பெற்ற உலக சரித்திரம் எல்லாம் மிரண்டு போக உலகத்தின் வீர வரலாறு எழுதப்பட்ட இந்த யாழ். மண்ணிற்கு முதன் முதலாக வந்திருக்கிறேன். இந்த மண்ணை நான் தலை வணங்குகிறேன். நான் எனது ஊருக்கு செல்லும் பொது இந்த மண்ணை எடுத்து கொண்டு சென்று எனது பூஜை அறையில் வைத்து கொள்ளுவேன்.
இம் மண் மாபெரும் வீர வரலாறு நிகழ்ந்த இடம். மறக்க முடியாததும் மறைக்க முடியாததுமான சரித்திரம் இந்த மண்ணில் குடி கொண்டுள்ளது. இந்தியாவில் இருக்கின்ற இளைஞர் யுவதிகளின் வாழ்வியல் வேறு ஈழத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் வாழ்வியல் வேறு.
நீங்கள் சமூக வலைத்தளத்தில் மூழ்கி கிடப்பதை விடுங்கள். அதில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உங்களுக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிக்கொணர்ந்து அதன்மூலம் ஒரு அங்கீகாரத்தை பெற்று உங்கள் அடுத்த தலைமுறைக்கு விளக்கேற்ற வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் மீது ஒரு மதிப்பு எப்போதும் உண்டு.
எமக்குள் தமிழர் எனும் திமிர் இருக்க வேண்டும். 18,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ஏழு மொழிகளில் இன்று வரை உச்சரிக்கப்பட்டு வருகின்ற மொழி தமிழ் மொழி. எனவே நாம் மிகத் தொன்மையான வரலாற்றை கொண்டவர்கள் என்ற திமிர் எமக்குள் எப்போதும் இருக்க வேண்டும். தமிழோடு தோன்றிய மொழிகள் எல்லாம் அழிந்து போக இன்றுவரை எட்டு அரை கோடி தமிழர்களால் பேசப்பட்டு வருகிறது.
போராட்டமான மண்ணில் பிறந்தவர்களுக்கே உலகை வெல்லக்கூடிய சக்தி பிறக்கும். மாணவர்களாகிய நீங்கள் கல்வியில் முன்னேற வேண்டும். கல்வி ஒன்றே உங்களை முன்னேற்றும் எனவும் தெரிவித்தார்.
யாழ் மண்ணை பூஜை அறையில் வைத்து வணங்கும் விஜய்!
Reviewed by Author
on
February 21, 2017
Rating:

No comments:
Post a Comment