வெள்ளத்தில் மூழ்கியது தென் மாகாணம் - உயிரிழப்பு 127 ஆக அதிகரிப்பு- 97 பேரை காணவில்லை
நாட்டில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரையில் 122 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் பிந்திய தகவலின் படி 127 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்புக்களில் இன்னும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அனர்த்தம் காரணமாக இதுவரை 150 பேர் காணாமல் போயுள்ளனர். மாவட்ட செயலாளர்களின் தகவல்களுக்கு அமைய இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும்அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கமைய 49 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த அனர்த்தம் காரணமாக 105956 குடும்பத்தை சேர்ந்த 415618 பேர் இடம்பெயர்ந்துள்ளாதாகவும் குறிப்பிடப்படுகின்றது.அத்துடன் 1602 வீடுகள் பகுதியாகவும் 187 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று இரவு 9 மணியவில் வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
14 மாவட்டங்களில் மக்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த 14 மாவட்டங்களிலும், வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக 51 ஆயிரத்து 899 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இரண்டாயிரத்து 937 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 69 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 47 பேர் பலியானதுடன், 4 ஆயிரத்து 815 குடும்பங்களை சேர்ந்த 18 ஆயிரத்து 31 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேற்படி மாவட்டத்தில் 44 மத்திய நிலையங்களில் பாதிக்கப்பட்ட 1194 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 844 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, பதுல்பான, கிரியெல்ல, இறக்குவானை, எஹலியகொட, குருவிட்ட, நிவித்திகல, எலபாத்த, கலவான,அயகம, ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மழை குறைவடைந்துள்ள போதிலும் வெள்ள நீரின் அளவு குறைவடையவில்லை என வடிகாலமைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வெள்ள நீரின் அதிகரிப்பு காரணமாக பல கங்கைகள் உடைப்பெடுத்துள்ளன. இதன்காரணமாக பல கிராமங்களில் நீரில் மூழ்கி மாயான தேசமாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக பல மக்களை மீட்க முடியாமல் மீட்பு பணியாளர்கள் தவித்து வருகின்றனர்.
தொடர்ந்தும் அடைமழை பெய்யுமாயின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வெள்ளத்தில் மூழ்கியது தென் மாகாணம் - உயிரிழப்பு 127 ஆக அதிகரிப்பு- 97 பேரை காணவில்லை
Reviewed by Author
on
May 28, 2017
Rating:

No comments:
Post a Comment