நாங்கள் குடிப்பது கழிவறை நீர்: இறந்து போனால் தான் காவலர்கள் வருவார்கள்! 18 வயது அகதியின் உருக்கம்...
மலேசிய அகதிகள் தடுப்பு முகாம்களில் 2015 முதல் இதுவரை 24 அகதிகள் மரணமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் மையம் உறுதி செய்துள்ளது.
தடுப்பு முகாம்களில் நிலவிவரும் கடுமையான இட நெருக்கடியினால் சுகாதார சீர்கேடுகள் முதல் அடிப்படை தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் வரை அகதிகளுக்கு வழங்குவதால் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளன. மலேசியாவின் தேசிய மனித உரிமை ஆணையகம் இதனை சித்திரவதை சூழல்களோடு ஒப்பிடுகிறது.
உணவு அளிக்கப்படும்போது சிறு பாத்திரத்தில் தண்ணீர் கொடுப்பார்கள், மற்ற நேரத்தில் தண்ணீர் வேண்டுமென்றால் கழிவறையில் வரும் தண்ணீரை தான் நாங்கள் குடிக்க வேண்டும். யாரேனும் இறந்து போனால் தான் பாதுகாவலர்கள் வருவார்கள்.
நாங்கள் புகார் கொடுத்தாலோ, மருத்துவமனைக்கு போக வேண்டும் என்றாலோ பதிலுக்குத் தாக்கப்படுவோம்”என தி கார்டியனுக்கு அளித்துள்ள பேட்டியில் 18 வயதான ரோஹிங்கியா அகதி மெளயுரா பேகம் தெரிவித்துள்ளார்.
தன்னுடன் அடைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி ஒருவர் அதிகாரிகளின் தாக்குதலால் கொல்லப்பட்டதாகவும், ஆனால் அதை நோயினால் ஏற்பட்ட மரணம் என தங்களுக்கு சொல்லப்பட்டதாக புக்கிட்(Bukit) சிறையிலிருந்த மற்றொரு மியான்மர் அகதி குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் மலேசிய நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் கொடுத்துள்ள தகவலின்படி, 2014-2016 காலகட்டத்தில் குடியேற்ற தடுப்பில் இருந்து 161 பேர் பல்வேறு நோயின் காரணமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அகதிகள் என உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் இதில் பெரும்பாலானோர் மியான்மரைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மலேசியாவின் அகதிகள் எண்ணிக்கையில் 90%மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள்.
அத்துடன் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகளும் வேறு ஆப்கானிஸ்தான், சிரியாவைச் சேர்ந்த அகதிகளும் குறிப்பிடத்தக்க அளவில் இங்கு உள்ளனர்.
மலேசியாவில் அகதி அந்தஸ்து பெறும் வரை தடுப்பு முகாம்களிலேயே இவர்கள் சிறை வைக்கப்படுகின்றனர். சமீபத்திய கணக்குகளின்படி, மலேசியாவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த 150,662 பேர் அகதி அந்தஸ்து பெற்றவர்களாக வசித்து வருகின்றனர்.
மலேசிய அகதிகள் தடுப்பு முகாம்களில் 2015 முதல் இதுவரை 24 அகதிகள் மரணமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் மையம் உறுதி செய்துள்ளதுடன், இதில் 22அகதிகள் மியான்மரைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நாங்கள் குடிப்பது கழிவறை நீர்: இறந்து போனால் தான் காவலர்கள் வருவார்கள்! 18 வயது அகதியின் உருக்கம்...
Reviewed by Author
on
May 20, 2017
Rating:

No comments:
Post a Comment