கிளிநொச்சியில் இரவு நேரங்களில் கடன் வசூலிக்கும் நிதி நிறுவனம்! மக்கள் விசனம்....
கிளிநொச்சியில் நிதி நிறுவனம் ஒன்று வறிய மக்களுக்கு வட்டிக்கு கடன்களை வழங்கி உள்ளது. பின்னர் அதனை அறவிடுவதற்கு நேற்றிரவு கடன் பெற்றுக்கொண்டவர்களின் வீடுகளுக்கு சென்று தகாத வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மக்களுக்கு பல்வேறு நிதி நிறுவனங்கள் அவர்களது வீடுகளுக்கே சென்று அதிகூடிய வட்டிக்கு கடன்களை வழங்கி வருகின்றனர்.
கிளிநொச்சி பரந்தன், கால்ஏக்கர் பகுதியில் உள்ள மிகவும் வறிய குடும்பங்களுக்கு கிளிநொச்சியில் கிளைகள் எதனையும் கொண்டிருக்காத நிதி நிறுவனம் ஒன்று அதி கூடிய வட்டிக்கு கடன்களை வழங்கி வருகின்றது.
நேற்றிரவு இரவு 9.15 மணிக்கு குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற, நிதி நிறுவனத்தின் கடன் அறவீட்டாளர்கள் கடன்களை பெற்றவர்கள் மீது அவதூறான வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொண்டதுடன் அச்சுறுத்தியுமுள்ளனர்.
குறித்த கடன்களைப்பெற்ற குடும்பங்கள் உரிய முறைப்படி கடன்களைச் செலுத்தி வருவதாகவும் தற்போது தொழில் எதுவும் இல்லாததால் இந்த தவணைக்கட்டணத்தை அடுத்த தவணையுடன் சேர்த்து கட்டுவதாக தெரிவித்தபோதும், இரவு வேளையில் வந்து தமக்கு தொந்தரவு தருவதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு வேளையில் பெண் பிள்ளைகளையும் வைத்திருக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களாகிய தாம் சமுகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் அதேவேளை, தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் ஆகியவற்றில் இவ்வாறு கடன் வழங்கும் நிறுவனங்கள் பிற்பகல் 5.00 மணிக்கு பின்னர் கடன்களை அறிவிடுவதற்கு வீடுகளுக்குச் செல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இது தொடர்பாக மாகாண சபையில் கூட தீர்மானிக்கப்பட்டபோதும் இவ்வாறு கடன்களை அறவிடுவதற்கு இரவு 9.15 மணிக்குச் செல்வது தொடர்பாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் இரவு நேரங்களில் கடன் வசூலிக்கும் நிதி நிறுவனம்! மக்கள் விசனம்....
Reviewed by Author
on
June 23, 2017
Rating:

No comments:
Post a Comment